நெடுநல்வாடை – பொருட்சுருக்கம்
மழைக்கால
நிகழ்வுகள்
உலகம்
குளிருமாறு, வலப்புறமாக வளைந்து எழுந்து, மழை பெய்வதில் தவறாத மேகங்கள்
புதுமழையைப் பெய்தன. வெள்ளம்போல் மழைநீர் வந்ததை வெறுத்த, வளைந்த
கோலையுடைய இடையர்கள், எருதுகளோடு, பசு, எருமை, ஆடு போன்ற
விலங்குகளின் கூட்டத்தை வேறிடத்தில் (மேடான முல்லை நிலத்தில்) மேயவிட்டனர்.
வேறிடத்திற்குச்
சென்றதால், இடையர்கள் தனிமைத் துயரத்தோடு வருந்தினர். இடையர்கள் தங்கள் தலையில் காந்தளின் நீண்ட இதழ்களோடு சேர்த்துக் கட்டியிருந்த
மாலைகளை அணிந்திருந்தார்கள். மழைநீர் அலைத்த-தால் அவர்கள் அணிந்திருந்த மாலைகள் கசங்கிப் போயின. குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, இடையர்கள் பலரும் கூடி, கையில் கொள்ளிக்கட்டைகளைப் பிடித்துக்கொண்டு சூடேற்றிக் கொண்டார்கள். இருந்தாலும், குளிரின் கொடுமையால், அவர்களின் கன்னங்கள்
புடைத்து நடுங்கின. விலங்குகள்
மேய்தலை மறந்தன. குரங்குகள் குளிரால் கூனிப்போயின. பறவைகள் குளிர் தாங்க முடியாமல் மரங்களிலிருந்து கீழே
விழுந்தன. கறவை மாடுகள், தம் கன்றுகளுக்குப்
பால் கொடுக்காமல் அவைகளைக் கடுமையாக உதைத்தன. மலையையே
குளிர்விப்பதுபோல் கூதிர்க்- காலத்தின் நள்ளிரவு
இருந்தது.
சிறிய முசுண்டைக்கொடியின் வெண்ணிறப்
பூக்கள், பொன்னிறமான
பீர்க்கம் பூக்களோடு புதர்கள் தோறும் மலர்ந்திருந்தன. வலிமையான
கால்களையும் மென்மை-யான சிறகுகளையும் உடைய கொக்குகளின் கூட்டம்,
கருமையான வண்டல் மண் பரவிக்கிடக்கும் ஈரமான வெண்மணலில், சிவந்த வரிகளையுடைய நாரைகளுடன் நின்றுகொண்டிருந்தன. அவை மழைநீரின் பெருக்குக் குறைந்தவுடன்,
எங்கெல்லாம் மீன்கள் கிடைக்குமோ அங்கு நின்று மீன்களைக் கவர்ந்தன.
மழை பெய்து ஓய்ந்தபின் மேலெழுந்த, நுரை பொங்குதலைப்
போன்ற வெண்ணிற மேகங்கள், அகன்ற பெரிய ஆகாயத்தில் தூவலைத் தூவுவதற்குக்
கற்றுக்கொள்வதைப்போல் சிறுசிறு தூறலாகத் தூவிக்கொண்டிருந்தன.
மழைக்காலத்தின்
வளமை
அழகிய இடத்தையுடைய அகன்ற வயல்களில், நிறைந்த மழைநீரால் செழித்து
வளர்ந்த, வளமான தாள்களையுடைய நெற்பயிர்களிலிருந்து மேலெழுந்த
கதிர்கள் முற்றி வளைந்து நின்றன. நன்கு செழித்து வளர்ந்த பாக்கு மரத்தின் நீலமணி போன்ற கழுத்துப்
பகுதியில் கூட்டமாக இருக்கும் பெரிய பாக்குக் குலைகளில் உள்ள
கொத்துகளில், உள்ளிருக்கும் நீர் வற்றி, பருத்து, பசுமையான காய்கள் இனிமையாகும்படி முற்றின. செறிந்து
விளங்கும் மலையுச்சியில் பலவிதமான மலர்கள் கலந்து பூத்திருக்கும் அகன்ற சோலையில் குளிர்ச்சியான
மரக்கிளைகளிலிருந்து நீர்த்துளிகள் இடைவிடாமல் சொட்டிக்கொண்டிருந்தன.
மாலைக்கால
நிகழ்வுகள்
உயர்ந்த மாடங்களோடு கூடிய வளமான பழைய ஊரில், ஆறுகளைப் போன்ற அகன்ற நெடிய தெருக்கள் இருந்தன. தழையாலான மாலையைத் தலையில் அணிந்து, பருத்து அழகுடன் விளங்கும் வலிமையான தோள்களும், முறுக்கிய
உடலும், மிகுந்த
வலிமையும் உடைய மக்கள் (யவனர்கள்), வண்டுகள்
மொய்க்கும் கள்ளை மிகுதியாக உண்டு,
மிகுந்த மகிழ்ச்சியோடு, தூறலாக விழும்
குளிர்ந்த மழைத்துளிகளைப் பொருட்படுத்தாமல்,
பகற்பொழுது கழிந்த
பிறகும், இரண்டு பக்கமும் (முன்னும் பின்னும்)தொங்கவிடப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு, விரும்பிய இடமெல்லம்
சுற்றித் திரிந்தார்கள். வெண்மையான வளையல்களையும், இறுகிய முன்கையையும், மூங்கில் போன்ற தோள்-களையும், மென்மையான தோற்றத்தையும், முத்தைப் போன்ற பற்களையும்,
அழகுடன் விளங்கும் காதணி-களுக்கு ஏற்ப,
மிகுந்த அழகும் குளிர்ச்சியும் உடைய கண்களையும் உடைய பேதைமைத் தன்மை வாய்ந்த பெண்கள், பூந்தட்டுகளில் வைத்திருந்த, பசுமையான காம்புகளையுடைய பிச்சிப்பூக்களின்
மலரும் பருவத்தில் உள்ள அரும்புகள் மலர்வதால், மாலைப்பொழுது வந்தது
என்பதை அறிந்து, இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் நெய்யில் நனைந்த
ஈரமான திரியைக் கொளுத்தி, நெல்லையும் மலரையும் தூவிக் கையால்
தொழுது, வளமான கடைத்தெருக்களில் மாலைப்பொழுதைக் கொண்டாடினார்கள்.
வீட்டில் வாழும் சிவந்த கால்களையுடைய ஆண்புறாக்கள், தாம் இன்புறும் பெண்புறாக்களுடன்
கூடிப் பொதுவிடங்களுக்குச் சென்று இரையைத் தேடி ஆராய்ந்து உண்ணாமல் இருந்தன. இரவும் பகலும் மனம் கலங்கிச் செயலற்று,
கொடுங்கையைத் தாங்கும் பலகையில் அந்தப் புறாக்கள் தங்கி இருந்தன.
காவலையுடைய பெரிய வீடுகளில் குற்றேவல் செய்பவர்கள் (பணிபுரிபவர்கள்), கொள்ளைப் போன்ற நிறமுடைய மணமுள்ள கல்லில் (அம்மிக் கல்லில்)
வாசனைப் பொருள்களின் கலவையை அரைத்தனர். வடநாட்டவர்
தந்த வெண்ணிறமான சந்தனம் அரைக்கும் கற்களில் தென்திசையிலிருந்து வந்த சந்தனக் கட்டைகள்
அரைக்கப்படாமல் இருந்தன. மகளிர் தங்கள் கூந்தலில் பூமாலைகளை அணியவில்லை.
அவர்கள் தங்களின் அடர்ந்த கரிய கூந்தலில் சில மலர்களை மட்டுமே சூடியிருந்தார்கள். அவர்கள், குளிர்ந்த
மணமுள்ள மரக்கட்டைகளை விறகாகக்கொண்டு, நெருப்பை உண்டாக்கி, கரிய,
வைரம் பாய்ந்த அகிலோடு வெண்மையான வாசனைப்
பொருள்களைக் கலந்து புகைத்தனர்.
கைவேலைப்பாடுகளில் சிறந்த தொழிலாளி அழகாகச்
செய்த, சிவந்த நிறத்தையுடைய விசிறி
(மூடிச்)சுருக்கிடப்பட்டு, வளைந்த ஆணியில்
தொங்கிக் கொண்டிருந்தது. விண்ணைத்
தொடும்படி உயர்ந்துநின்ற மேல்நிலை மாடங்களில், இளவேனில்
காலத்தில் உறங்கும்படுக்கை அறைக்குத் தென்றல் காற்றைத் தரும், நேருக்கு நேராக அமைந்த
சாளரங்கள் திறக்கப்- படாமல் இருந்தன.
திண்மையான நிலைவாசலில் பொருந்தியுள்ள இரட்டைக் கதவுகள்
தாழிட்டுக் கிடந்தன. ‘கல்'லென்கிற
ஓசையுடன் மழை தூவுவதால், அனைவரும் குவிந்த வாயையுடைய செம்புகளில்
இருந்த தண்ணீரைக் குடிக்காமல், அகன்ற வாயையுடைய கணப்புச்சட்டியின்
(தூபமூட்டியின்) சிவந்த நெருப்பின் வெப்பத்தை நுகர்ந்தனர்.
ஆடல் மகளிர்
தாம் பாடுகின்ற பாடலுக்குப் பொருந்த யாழின் நரம்பைக் கூட்டுதற்கு, குளிர்ச்சியால்
நிலைகுலைந்த இனிய குரலை எழுப்பும் நரம்பை,
தங்களின்
பருத்து எழுந்த முலைகளின் வெப்பத்தில் தடவி, கரிய
தண்டினையுடைய சிறிய யாழை, பண்ணை இசைப்பதற்கு ஏற்றவாறு முறைப்படுத்திக்கொண்டனர். கணவரைப்
பிரிந்த மகளிர் வருந்துமறு, மழை
மிகுதியாகப் பெய்து, குளிர்க்காலம் நிலைபெற்றிருந்தது.
மன்னனின் அரண்மனை
எல்லாத் திசைகளிலும், தன்னுடைய விரிந்த கதிர்களைப் பரப்பிய அகன்ற இடத்தையுடைய ஞாயிறு, மேற்கு நோக்கி உயர்ந்து எழும் நண்பகல் பொழுதில், கட்டிடக்கலை நூலை
அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேராகப் பிடித்து, திசைகளைக் குறித்துக்கொண்டு, அத்திசைகளில்
உள்ள தெய்வங்களைக்
கருத்தில் கொண்டு, பெரும்
புகழ்பெற்ற அரசர்க்குத் தகுந்த வகையில், அரண்மனையின் பாகங்களைப் பகுத்துக்-கொண்டு, ஒரு சேர அவ்விடங்களையெல்லாம் வளைத்து, உயர்ந்த
நிலையையுடைய மதிலை அமைத்தனர். அந்த மதிலின் நிலையோடு பெரிய (ஆணிகளால்) இரும்பால் இணைக்கப்பட்ட, சாதிலிங்கத்தைப்
(சாதிலிங்கம் – அரக்கு) பூசிய,
இரண்டாக அமைந்துள்ள சிறந்த கதவுகளைப் பொருத்தினார்கள். அவை நிலையோடு இணந்து இடைவெளியில்லாமல்
இருந்தன. உத்தரம் என்ற விண்மீனின் (நட்சத்திரத்தின்)
பெயரைக்கொண்ட குறுக்குக் கட்டை (விட்டம்)
சிறந்த வலிய மரத்தால் செய்யப்பட்டிருந்தது. அக்கதவுகளில்,
மலரும் பருவத்தில் உள்ள குவளை மலரின் அரும்பு போன்ற புதிய கைப்பிடிகள்
பொருத்தப்பட்டிருந்தன. கைத்தொழிலில் வல்லமை பொருந்திய தச்சன்
ஆணிகளை நன்றாக முடுக்கியதால் கதவுகளுக்கிடையே இடைவெளியில்லாமல் இருந்தது. நெடிய வாயிலில்
சிறுவெண்கடுகுகளை
அரைத்து அப்பி, நெய் தடவியிருந்தனர். அந்த வாயில், வெற்றிக்கொடியைத் தாங்கிவரும் யானைகள்
அரண்மனைக்குள் நுழையும்படி உயர்ந்ததாக இருந்தது. மலையைக் குடைந்து செய்ததைப் போல் இருந்த
வாயில், திருமகள் நிலைபெற்று விளங்கும் குற்றமற்ற சிறப்புடையதாகவும்
இருந்தது.
அத்தகைய சிறப்புடைய வாயிலையுடைய மாளிகையின்முன்
உள்ள முற்றத்தில் வெண்மணல் பரப்பப்பட்டிருந்தது. அந்த
முற்றத்தில், நீண்ட மயிரை-யுடைய வெண்மையான
ஆண்கவரிமாக்களும், குறுகிய கால்களையுடைய அன்னங்களும் தாவித் திரிந்து
கொண்டிருந்தன. அங்கே, கொட்டிலில் நிற்பதை
வெறுத்த, நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள், புல்லை மென்று தின்னும்பொழுது தனிமைத் துயரத்தில் கனைத்தன. நிலவின் பயனை அரசன் நுகரும் நெடிய வெண்முற்றத்தி- லுள்ள,
சுறாமீனின் பிளந்தவாய் போன்ற குழாயிலிருந்து வரும் நீர் விழுகின்ற பாத்திரம்
நிறைவது, கலங்கி விழுகின்ற அருவியின் ஒசையைப்போல் ஒலித்தது.
அதற்கு அருகில், தோகையை விரித்து, கூவுகின்ற மெல்லிய இயல்பையுடைய மயிலின் ஓசை ஊதுகொம்பின் ஓசைபோல் இருந்தது. இந்த ஒசைகள், அடர்ந்த
மலையில் காணப்படும் ஆரவாரம்போல அந்த மாளிகையில் முழங்கின.
அந்தப்புரம்
பெருமை
பொருந்திய தலைமையினையுடைய மன்னனைத் தவிர, மற்ற ஆண்கள் எவரும் அருகே வரமுடியாதபடி காவலும் எல்லையும் உடையதாக அரண்மனையின் அந்தப்புரம்
இருந்தது. பணிப்பெண்கள், யவனர் செய்த
சிறந்த வேலைப்பாடுகளுடன் விளங்கும் பெண்சிலையின், கைகளில்
ஏந்தியிருக்கின்ற வியப்பைத் தரும் அழகுடைய அகல் விளக்குகளில் நிறைய நெய்யை ஊற்றி, பருத்த
திரிகளைக் கொளுத்தி, செந்நிறமான
தழலின் மேல்நோக்கி எரிகின்ற சுடர்
குறையும் போதெல்லாம்
நெய்வார்த்துத் திரிகளைத் தூண்டிச் சரிப்படுத்தி, அரண்மனையின் பல்வேறு இடங்கள்தோறும் பரந்த இருள் நீங்கும்படி செய்தனர். அந்த அந்தப்புரம் மலைகளைப்
போல் உயர்ந்ததாக இருந்தது. அங்கு, மலைகளைச் சேர்ந்து, வானவில்
கிடப்பதுபோல் பலநிறக் கொடிகளும் அசைந்து கொண்டிருந்தன. பல இடங்களிலும்
வெள்ளியைப் போன்ற சாந்து பூசப்பட்டிருந்து. நீலமணியைப் போன்ற
கரிய திரண்ட வலிய தூண்களும் இருந்தன.
செம்பினால் செய்யப் -பட்டது போன்ற உயர்ந்த
சுவரில், பல்வேறு வடிவமுடைய பூக்கள் ஒரு கொடியைச் சுற்றி இருப்பது
போன்ற சித்திரம் வரையப்பட்டிருந்தது. இவ்வாறு, காண்பதற்கு இனிய நல்ல இல்லமாக கருவறை என்று பெயர்பெற்ற அந்தப்புரம் காட்சி
அளித்தது.
கருவறையில்
ஒரு கட்டில்
நாற்பது ஆண்டு காலம் வாழ்ந்த, முரசு போன்ற வலிய கால்களும்,
போரில் சிறந்த யானை என்று போற்றப்பட்ட, மிகுந்த
அழகும், வரிகளையுமுடைய நெற்றியும் கொண்ட, போரில் இறந்த யானையின், தாமே வீழ்ந்த தந்தங்களைச் சீவிச்
சீர்படுத்தி, அழகும் செம்மையும் பொருந்தி விளங்குமாறு,
திறமையான
தச்சன் கூரிய சிற்றுளியால் குடைந்து செய்த இரண்டு இலை வடிவங்களுக்கு இடையே தலைவியின்
கட்டில் உருவாக்கப்பட்டிருந்தது.
சூல் முதிர்ந்து அசையும்
இயல்புடைய மகளிரின் பால் கட்டிப் பக்கங்கள் பருத்த முலைகளைப் போல், பக்கங்களில் திரண்டிருக்கும்
குடத்தை உடையதாக கட்டிலுக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி இருந்தது. பூண்டின் வலிமையான
அடிப்பகுதி போன்று கட்டிலின் காலின் அடிப்பகுதி பொருத்தமாக விளங்குமாறு, அகன்ற அளவுகளைக் கொண்ட பெரும் புகழ்பெற்ற வட்ட வடிவமான கட்டில் அமைந்திருந்தது.
உயர்ந்த நுண்ணிய நூலால் கோர்த்த முத்து வடங்களை நான்கு பக்கமும் சாளரம்
போல் தொங்கவிட்டிருந்தனர். புலியின் உருவம் பொறிக்கப்பட்ட
பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டுகளைப் போன்ற தகடுகளால் கட்டிலின் மேலிடம் மறையும்படி
அமைத்திருந்தனர். குற்றமற்ற சாயம்
ஏற்றப்பட்ட பல மயிர்க்கற்றைகளை விரவி உருவாக்கப்-பட்ட கட்டிலில் சிங்கம் வேட்டையாடுவது
போலும், காட்டில் மலரும் பல்வேறு மலர்கள் போலும் ஓவியம் வரையப்பட்டிருந்த போர்வையை விரித்திருந்தனர்.
இப்படுக்கை சிறப்புற, காதலோடு துணையைப் புணர்ந்த
அன்னங்களின் வெண்மையான சிறகுகளை இட்டுச் செய்த மெத்தையை கட்டிலின் மீது பரப்பி, தலையணைகளையும்
வைத்திருந்தார்கள். அதன்மேல் கஞ்சியிடப்பட்டுத் துவைத்த, மலர்களின் மணமுள்ள தூய துணியை விரித்திருந்தார்கள்.
கட்டிலில்
தலைவி
போருக்குச் சென்ற தன் கணவனைப் பிரிந்திருந்த
தலைவி, முன்பு முத்துமாலைகள் அணிந்த பருத்த
முலைகளையுடைய தன்னுடைய மார்பில், இப்பொழுது முத்துமாலைகள் அணியவில்லை. நீண்ட கூந்தல்
பின்புறம் தாழ்ந்து வீழ்ந்து கிடக்க, அவளுடைய நல்ல நெற்றியில், எண்ணெய் தடவாததால் வறண்ட சிலவாகிய மென்மையான மயிர் புரள, தலைவி கட்டிலில் படுத்திருந்தாள். அவள் தன் காதணிகளை நீக்கி,
தன் காதுகளில் உள்ள சிறிய
துளைகளில், தாளுருவி என்னும் காதணியை அணிந்திருந்தாள். அவள், முன்பு பொன்னாலான
வளையல்கள் அணிந்திருந்த தன்னுடைய முன்கைகளில், இப்பொழுது வலம்புரிச்
சங்கு வளையல்களோடு காப்புக் கயிற்றையும் கட்டி இருந்தாள். வாளைமீனின் பிளந்த வாயைப் போன்ற வளைந்த
சிவந்த நிறமுடைய மோதிரத்தைத் தன்னுடைய சிவந்த கைவிரலில் அணிந்திருந்தாள். முன்பு, பூவேலைப்பாடுகள்
அமைந்த ஆடையை உயர்ந்த வளைவுகள் உடைய தன் அல்குலில் அணிந்திருந்த தலைவி, நூலால் செய்யப்பட்ட, மாசுபடிந்த பருத்திப் புடைவையை உடுத்திக்கொண்டு,
வண்ணங்களால் அலங்கரிக்கப்படாத ஓவியம் போல் காட்சி அளித்தாள்.
ஒப்பனை செய்யப்படாத கால்களோடு, தேமல் பரந்த, மாந்தளிர் போன்ற மேனியில், அழகிய, திரண்ட மூங்கில் போன்ற மென்மையான தோள்களோடும், தாமரை
மொட்டுப் போன்ற முலைகளோடும், முலைக் கச்சுகளை இறுகக் கட்டிய,
வளைந்து மெலிந்த இடுப்பும், மென்மையான சாயலுமுடைய
பணிப்பெண்கள் தலைவியின் நல்ல அடிகளைத் தடவி ஆறுதல் கூறினர்.
நரைத்த முடி கலந்திருக்கும்
மணமுள்ள மெல்லிய மயிரினையுடைய, சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயர்
அளவுக்குமீறி அதிகமாகத் திரண்டு,
சுருக்கமாகவும் விளக்கமாகவும் ஆறுதலாகப் பலவற்றையும்
திரும்பத் திரும்பக் கூறினர். ” இப்பொழுதே வந்துவிடுவார் உன் இனிய துணைவர்” என்று, அவள் மனத்துக்கு ஏற்ற சொற்களை அவர்கள் கூறினாலும், தலைவி
அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் மனம் கலங்கினாள்.
நுண்ணிய சாதிலிங்கத்தைப் பூசிய, வலிமையான கட்டிலின் கால்கள், பால் சுரக்காத வறிய முலை போன்ற சிறிய குடங்களைக்
கொண்டிருந்தன. அத்தகைய கால்களைக் கட்டிலின் மேற்பகுதியோடு நன்கு இணைத்திருந்தனர்.
புதிதாகச் செய்த,
மெழுகு பூசிய கட்டிலின்
மேல் விதானத்தில், திரைச்சீலையைக்
கட்டியிருந்தனர். அதில் வலிமை வாய்ந்த கொம்புகளை-யுடைய மேடராசியை முதலாகக்கொண்டு, வானத்தில்
ஊர்ந்து திரிந்து விரைந்து செல்லும் ஞாயிற்றோடு, மாறுபட்டு, மிகுந்த சிறப்புடைய
திங்களோடு எப்பொழுதும் நிலைபெற்று விளங்கும், உரோகிணி என்னும்
விண்மீனின் சித்திரம் வரையப்பட்டிருந்தது. அதைப்
பார்த்த தலைவி, தான் தன் கணவனுடன் அவ்வாறு பிரியாமல் வாழும் பேறு
பெறவில்லையே என்று நினைத்துப் பெருமூச்சுவிட்டாள். அவளுடைய கருமை-யான கண்ணிமைகளில் நிரம்பி வழியும் முத்துப் போன்ற கண்ணீரை, தன் சிவந்த
விரலால் கடைக்கண்ணில் கொண்டு சேர்த்து, விரலில்
மீந்த சிலவற்றைச் சுண்டி விட்டு, தனிமையில் வருந்தினாள். அன்பு மிகுந்த தலைவிக்குத் துன்பம் தருகின்ற ஆற்றமுடியாத துயரம்
தீரும்படி, வெற்றியைக்
கொடுத்து, இப்பொழுதே இந்தப் போர் முடியவேண்டும் என்று செவிலித் தாயர் கொற்றவையை வேண்டினர்.
மன்னனின் நிலை
ஓளி மின்னும் நெற்றிப்பட்டத்தோடு
விளங்கி, போர்த்தொழிலில் பயிற்சி பெற்ற யானைகளின் நீண்டு திரண்ட துதிக்கைகள் வெட்டப்பட்டு
நிலத்தின்மேல் புரளும்படி, வீரர்கள் யானைகளைக் கொன்றனர். போரில் வாளால் விழுப்புண்கள் பட்ட
வீரர்களைக் காண்பதற்காக, அரசன் பாசறையிலிருந்து வெளியே சென்றான்.
அப்பொழுது, அங்கே, அகல் விளக்குகளில்
எரிந்து கொண்டிருந்த பருத்த திரிகள், வடக்குத் திசையிலிருந்து
காற்று வந்தால் தெற்கு நோக்கிச் சாய்ந்தன. வேப்பம்பூ மாலையை நுனியில் சூட்டிய வலிய காம்பினையுடைய
வேலோடு, வீரன் ஒருவன் அரசனுக்கு முன்னே சென்று, புண்பட்ட வீரர்களை
அரசனுக்கு முறையாகக் காட்டினான்.
பின்னர், பாசறையின் கரிய சேறுடைய தெருவில், மணிகளை முதுகில்
இட்ட, பெரிய கால்களையுடைய பெண்யானைகளோடு,
சேணம் களையப்பெறாத, பாயும் ஓட்டத்தையுடைய செருக்குடைய
குதிரைகள், தம்மேலே வீசும் மழைத்துளிகளை உதறிச் சென்றன.
அரசன் தன் இடப்பக்கத்து நழுவி வீழ்ந்த அழகிய மேலாடையைத் தழுவிக்கொண்டான். வாளைத் தோளில்
கோர்த்த வலிமையுடைய காளைபோன்ற வீரனின் தோள்மேல் தன் வலதுகையை வைத்துக்கொண்டு,
போரில் விழுப்புண்பட்ட வீரர்களின் முகம் மலர்ச்சியுறுமாறு அரசன் அவர்களை
நோக்கினான். இவ்வாறு வீரர்களைப் பார்த்துவரும் மன்னன்மேல் மழைத்துளி
படாதவாறு, நூலால் கோர்த்த முத்துமாலைகள் தொங்கும் வெண்கொற்றக்
குடை, ’தவ்’ என்னும் ஓசையோடு அசைந்து தாவும் மழைத்துளிகளை மறைத்தது.
‘நள்’ என்னும் ஓசையையுடைய நள்ளிர-விலும் உறங்காமல்,
சில வீரர்களோடு, புண்பட்ட வீரர்களைப் பார்த்துவரும்
அரசன், பல பகை மன்னர்களோடு மாறுபட்டு, பாசறையில்
தங்கி நடத்தும் இந்தப் போர் இப்பொழுதே முடிவதாக.