Saturday, October 30, 2021

நெடுநல்வாடை – அறிமுகம்

                                                     நெடுநல்வாடை – அறிமுகம்

முனைவர் இர. பிரபாகரன்

 

தமிழ் மொழியின் தொன்மை

இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல்[1]. அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், ‘என்ப’, ‘மொழிப’, ‘கூறுப’, ‘என்மனார் புலவர்என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன.

 

அகத்திணையும் புறத்திணையும்

பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள்  என்று இருவகையாகத் தொல்காப்பியம் பிரிக்கிறது. திணை என்ற சொல் நிலம்’, ‘இடம்’, ’குடி’, ‘ஒழுக்கம்’, ‘பொருள்என்ற பல பொருட்களையுடைய ஒருசொல். தமிழ் இலக்கியத்தில் திணை என்ற சொல் பொருள்என்பதைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம், புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கண மரபு. ஒருஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் பொழுதும், அவர்களின் திருமணத்திற்குப் பிறகும், தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவையாகையால், அவை அகப்பொருள் எனப்படும். அகப்பொருளைப்பற்றிப் பாடும் பாடல்கள் அகத்திணையில் அடங்கும். காதலைத் தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர், வீரம், வெற்றி, புகழ், கொடை, நிலையாமை முதலிய பொருட்களை மையமாகக்கொண்ட பாடல்கள் புறத்திணையில் அடங்கும்.

 

சங்க இலக்கியம்

சங்க காலம் என்பது கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்கின்றனர்.[2] சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள்  புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதற்கேற்ப, சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த சிறந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் பத்து நூல்களாக்கினார்கள். மூன்று முதல் 140 அடிகளுடைய  பாடல்களில் சிறந்தவற்றை எட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். எட்டுத்தொகை என்ற சொல் இந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்கொகையில் அடங்கிய எட்டு நூல்களும் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்கள் தொகுக்கப்பட்ட காலத்தைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. முதல் அல்லது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று பேராசிரியர் மு. வரதராசன்[3] குறிப்பிடுகிறார். எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு அல்லது எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஈவா வில்டன் கருதுகிறார்.[4]

 

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்று அழைக்கப்படுகின்றன.   கீழ்வரும் பாடலில் எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.

எட்டுத்தொகை நுல்களில், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களும் அகத்திணையைச் சார்ந்தவை. புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து ஆகிய இரண்டும் புறத்திணையைச் சார்ந்தவை. அகமும் புறமும் கலந்தது பரிபாடல்.

 

பத்துப்பாட்டு

கீழ்வரும் பாடலில் பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்களும் ஆற்றுப்படை[5] என்னும் வகையைச் சார்ந்தவை. இந்த ஐந்து ஆற்றுப்படை நூல்களும் மதுரைக் காஞ்சியும் புறத்திணையைச் சார்ந்தவை. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு மற்றும் பட்டினப்பாலை ஆகியவை அகத்திணையைச் சார்ந்தவை. நெடுநல்வாடை அகத்திணையைச் சார்ந்ததா அல்லது புறத்திணையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்குரியது. பத்துப்பாட்டில் உள்ள பாடல்களுள் முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச் சிறிய பாடலாகும்; மதுரைக் காஞ்சி 782 அடிகளை உடைய மிகப் பெரிய பாடலாகும்.

 

நெடுநல்வாடை

வாடை என்பது வடக்கிலிருந்து வரும் குளிர்க்காற்று. நெடுநல்வாடை என்பதற்கு நெடிய நல்ல வாடைக் காற்று என்று பொருள். வாடைக் காற்று வீசும் குளிர் காலமாகிய ஐப்பசி மார்கழி மாதங்களில் ஒரு மன்னன் (தலைவன்) தன் மனைவியை (தலைவியை) விட்டுப் பிரிந்து போருக்குச் சென்றிருக்கிறான். தன் கணவனைப் பிரிந்து வருத்தத்தோடு இருக்கும் தலைவிக்கு ஒரு பொழுது ஒரு ஊழி (யுகம்) போல் நெடியதாக உள்ளது. பகைவன் இருக்கும் நாட்டுக்குச் சென்று பாசறையில் தங்கிப் போர் செய்யும் மன்னனுக்கு அந்த வாடைக் காற்று வீசும் காலம் வெற்றியைத் தரும் காலமாக இருப்பதால் அது அவனுக்கு நல்ல வாடைக் காலமாக உள்ளது. இவ்வாறு தலைவிக்கு நெடியதாகவும் தலைவனுக்கு நல்லதாகவும் இருக்கும் வாடைக் காலத்தில் தலைவன் தலைவி ஆகிய இருவரின் நிலை பத்துப்பாட்டில் உள்ள நெடுநல்வாடை என்ற பாட்டில் விளக்கமாகவும் அழகாகவும் கூறப்பட்டிருக்கிறது.

பத்துப்பாட்டில் உள்ள நெடுநல்வாடை 188 அடிகளுடன் கூடிய அகவற்பா வகையைச் சார்ந்த பாட்டு. நெடுநல்வாடையை இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவருடைய இயற்பெயர் கீரன் என்பதாக இருந்திருக்கலாம். சங்க காலத்தில் புலவர்களின் பெயருக்கு முன்னால் ‘ந’ என்ற எழுத்தைச் சேர்ப்பது வழக்கிலிருந்தது. உதாரணமாக, நச்செள்ளையார், நக்கண்ணையார் போன்ற பெயர்களில் ‘ந’ என்ற எழுத்து சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆகவே, உயர்வு கருதி ‘ஆர்’ என்ற சொல்லும் சேர்த்து, கீரன் என்பவர் நக்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவரின் தந்தையார் மதுரையில் கணக்காயனாராக (ஆசிரியராக) இருந்ததால், இவர் மதுரைக் கணக்காயனார் மகனார் என்று அழைக்கப்பட்டார்.

 

           இவரும் மதுரை நக்கீரர் என்பவரும் ஒருவரே என்பது ஒரு சாரர் கருத்து.  வேறு சிலர், மதுரை நக்கீரர் வேறு இவர் வேறு என்பர்.  இவர் கடைச்சங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது.  இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும் உடையவர்.  இவருடைய பாடல்கள் புறநானூற்றில் மூன்றும் (56, 189, 395), அகநானூற்றில் பதினேழும் (36, 57, 78, 93, 120, 126, 141, 205, 227, 249, 253, 290, 310, 340, 346, 369, 389), நற்றிணையில் ஏழும் (31, 86, 197, 258, 340, 358, 367), குறுந்தொகையில் ஏழும் (78, 105, 143, 161, 266, 280, 368) இடம் பெற்றுள்ளன. இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மற்றும் பத்துப்பாட்டில் உள்ள நெடுநல்வாடையை இயற்றியது மட்டுமல்லாமல் பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படையையும் இயற்றியவரும் இவரே என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், திருமுருகாற்றுப்படை   சஙகாலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்டதாக டாக்டர் மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். அவ்வாறாயின், நெடுநல்வாடையை இயற்றிய நக்கீரரும் திருமருகாற்றுப்படையை இயற்றிய நக்கீரரும் ஒருவராக  இருந்திருக்க முடியாது. மேலும், இப்பாட்டின் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று டாக்டார் மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.

நெடுநல்வாடையின் சிறப்பு

குளிரின் கொடுமை, அந்தக் குளிர் காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள்,  அந்த ஊரில் உள்ள அரண்மனையின் வாயில், அரண்மனையின் முற்றம், அரண்மனையின் ஒரு பகுதியான அந்தப்புரம், அந்த அந்தப்புரத்தின் அழகு, அந்தப்புரத்தில் குளிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள், அங்குள்ள அழகாக அலங்கரிக்கப்பட்ட வட்டவடிவமான கட்டில், அந்தக் கட்டிலில் படுத்திருக்கும் அரசியின் அழகு, அவள் கணவன் போருக்குச் சென்றுள்ளதால் அவனைப் பிரிந்து வருந்தும்  அரசியின் மனநிலை, அவளுக்கு ஆறுதல் கூறும் பணிப்பெண்களின் செயல்கள், பாசறையில் உள்ள மன்னன் விழுப்புண்பட்ட வீரர்களை பார்ப்பது ஆகியவற்றை ஒரு நிழற்படம் எடுக்கும்பொழுது ஒரு ஒளிப்பதிவாளர் தொலைவிலிருந்து அருகே சென்று மிக நுணுக்கமாக ஒளிப்பதிவு  செய்வதுபோல் (like a cameraman slowly zooming in and taking a closeup shot), நெடுநல்வாடையின் ஆசிரியர் மிக அழகாகவும் நுணுக்கமாகவும் ஒரு சொல்லோவியம் தீட்டுகிறார். நெடுநல்வாடை இத்துணை அழகாக இருப்பதால்தான், அது ‘கோல நெடுநல்வாடை’ (அதாவது அழகான நெடுநல்வாடை) என்று அழைக்கப்டுகிறது.

 

இதுபோன்ற பாடலைப் படிப்பதால் என்ன பயன் என்று சிலர் சிந்திக்கலாம். இதுபோன்ற பாடல்களைப் பயன் கருதிப் படிக்காமல், நயன் கருதிப் படிக்க வேண்டும். இந்தப் பாடலைப் படிக்கும்பொழுது, படிப்பவர்கள் தங்கள் கற்பனையோடு கலந்து படித்தால், இந்தப்பாடலில் கூறப்பட்டிருக்கும் செய்திகள், ஒரு காணொளிபோல் அவர்களின் நெஞ்சைவிட்டு நீங்காமல்  என்றென்றும் நிலைத்து நிற்கும்.

நெடுநல்வாடை அகமா புறமா?

நெடுநல்வாடை அகத்திணையைச் சார்ந்ததா புறத்திணையைச் சார்ந்ததா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நெடுங்காலமாக நிலவி வருகிறது.  அகத்திணைப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் காதல் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூறும்பொழுது அவர்களின் பெயர்களைக் குறிப்பிடக் கூடாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. அந்த மரபிற்கேற்ப, தலைவன் தலைவி ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல் அவர்களுடைய காதல் வாழ்க்கை மட்டும் பாடப்பட்டிருப்பதால்,  இது அகத்திணையைச் சார்ந்தது என்பது ஒரு சாராரின் கருத்து. போரில் புண்பட்ட வீர்களை அரசன் காணச் செல்லும்பொழுது, படைத்தலவன் ஒருவன் அரசனோடு செல்கிறான். அவன் கையிலிருந்த வேலில் வேப்பம்பூ மாலையைக்  கட்டியிருந்தான் என்பது, “வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு” என்ற அடியிலிருந்து (நெடுநல்வாடை  - 176) பெறப்படுகிறது. வேப்பம்பூ மாலை பாண்டியர்களுக்கு உரியது. ஆகவே, இப்பாடல் பாண்டிய மன்னனைப் பற்றியது என்றும், அதனால், இப்பாடல் புறத்திணையைச் சார்ந்தது என்றும் சிலர் கூறுகின்றனர். இப்பாடல்  தலயாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றியது என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். ஆனால், பாடலில் தலயாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய குறிப்பு ஒன்றும் காணப்படவில்லை. மற்றும், பாடலில் வேப்பம்பூ மாலை வேலில் சூட்டப்பட்டிருந்ததாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, மன்னனின் தலையிலோ அல்லது மார்பிலோ அணியப்பட்டிருந்ததாகக் கூறப்படவில்லை.  புண்பட்டவர்களைப் பேய்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக வேப்பந்தழை, வேப்பம்பூ ஆகியவற்றைப் பயன் படுத்துவது வழக்கிலிருந்தாக புறநானூற்றுப் பாடல் 296 லிருந்து காணமுடிகிறது.

 

           வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்

எல்லா மனையும் கல்லென் றவ்வே          (புறநானூறு – 286, 1-3)

 

ஆகவே, நெடுநல்வாடை புறத்திணையைச் சார்ந்தது என்பதற்கு ஏற்ற சான்றுகள் இல்லாத காரணத்தினால், அது அகத்திணையைச் சார்ந்தது என்று கருதுவதே சிறந்ததாகத் தோன்றுகிறது. மேலும், இப்பாட்டின் உரிப்பொருள் பிரிதலாக இருப்பதால் இப்பாட்டு, அகத்திணையின் உட்பிரிவாகிய பாலைத் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது[6].

 

                                             ****** ***** ***** *******

துணைநூல்கள்

பெருமழைப்புலவர் பொ. வெ. சோமசுந்தரனார், பத்துப்பாட்டு (பகுதி 1, 2) (2008),

திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த கழகம் லிட்., சென்னை.

முனைவர் இரா. ருக்மணி, திருமதி வைதேகி ஹெர்பர்ட் (ஆங்கில மொழியாக்கம்)  (2011),

கொன்றை, சென்னை.



[1] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 5

[2] டாக்டர் பூவண்ணன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் - 14

[3] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் - 28

[4] Eva Wilden, குறுந்தொகை, பக்கம் - 1

[5] வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும் வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலியோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று தொல்காப்பியம் கூறுகிறது.

 

[6]. பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார், பத்துப்பாட்டு நெடுநல்வாடை (பக்கம் 12)

நெடுநல்வாடை - மூலம்

 நெடுநல்வாடை



வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் 
நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ 
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் 
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை . . . .10

கன்றுகோ ளழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்
புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்
பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப்
பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி
இருங்களி பரந்த ஈர வெண்மணற்
செவ்வரி நாரைய டெவ்வாயுங் கவரக்
கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப்
பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை
அகலிரு விசும்பில் துவலை கற்ப . . .20

அங்கண் அகல்வயல் ஆர்பெயற் கலித்த
வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
முழுமுதற் கமுகின் மணியுறழ் எருத்திற்
கொழுமடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு 
தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக் 
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க 
மாட மோங்கிய மல்லன் மூதூர் 
ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற் . . .30

படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்துளி பேணார் பகலிறந்து
இருகோட்ட டறுவையர் வேண்டுவயின் திரிதர
வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்
மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல்
பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து . . .40

அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து 
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது 
மல்லல் ஆவணம் மாலை யயர 
மனையுறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையடு மன்றுதேர்ந் துண்ணாது
இரவும் பகலும் மயங்கிக் கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்பக்
கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக . . .50

வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக்
கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து 
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக்
கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
வானுற நிவந்த மேனிலை மருங்கின் . . .60

வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக்
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவாய்த் தடவில் செந்நெருப் பார
ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் . .70

காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து
கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்
பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத் . . .80

துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு
நாளடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாளடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து
ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை 
வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து . . .90

நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்
பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி
புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக்
கிம்புரிப் பகுவாய் அம்பண நிறையக்
கலுழ்ந்துவீழ் அருவிப் பாடிறந் தயல
ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை
நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில் . . .100

யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையேந் தையகல் நிறையநெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி
அறுஅறு காலைதோ றமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்கப்
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்
வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு
வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி யன்ன விளங்குஞ் கதையுரீஇ . . .110

மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பி னல்லில்
தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்
இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்
பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து
சீருஞ் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூருளிக் குயின்ற ஈரிலை யிடையிடுபு
தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் . . .120

புடைதிரண் டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருத்தி அடியமைத்துப்
பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் 
மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு
முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப்
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து
ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து
முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து . . .130

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி
இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை
ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப்
பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நன்னுதல் உலறிய சின்மெல் லோதி
நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்
வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் . . .140

பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையடு கடிகைநூல் யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்துகோட் டல்குல்
அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு
புனையா ஓவியங் கடுப்பப் புனைவில்
தளிரேர் மேனித் தாய சுணங்கின்
அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை
வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் . . .150

மெல்லியல் மகளிர் நல்லடி வருட
நரைவிரா வுற்ற நறுமென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
இன்னே வருகுவர் இன்துணை யோரென
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து
நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக . . .160

விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா
மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்
புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர விறறந்து
இன்னே முடிகதில் அம்ம மின்னவிர்
ஓடையடு பொலிந்த வினைநவில் யானை
நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக் . . .170

களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல
வேம்புதலை யாத்த நோன்காழ் எ·கமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியடு
பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப் . .180

புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கட் காளை
சுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே. . . .188

-----------------------
நெடுநல்வாடை முற்றிற்று.
----------------------

நெடுநல்வாடை - மூலமும் உரையும்

 நெடுநல்வாடை – மூலமும் உரையும்

 

வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇப்

வையகம் = உலகம்; பனிப்ப = குளிர;  வலன் = வலப்பக்கம் ; ஏர்பு = எழுந்து ; வளைஇ = வளைந்து

வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ = உலகம் குளிருமாறு, வலப்புறமாக எழுந்து வளைந்து

குறிப்பு: வையகம்  என்பது மங்கலச் சொல்லாகக் கருதப்படுகிறது. பனிப்ப என்பது குளிர்ச்சியின் மிகுதியைக் குறிக்கிறது.

 

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
வானம் = மேகம்; பெயல் = மழை; புதுப்பெயல் = புது மழை

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென = மழை பெய்வதில் தவறாத மேகம் புது  மழையைப் பெய்தபொழுது,

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஆர்கலி = வெள்ளம்; முனைஇய = வெறுத்த; கொடுங்கோல் = வளைந்த கோல்; கோவலர் = இடையர்

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் = வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய இடையர்கள்

குறிப்பு: குறிஞ்சி நிலத்தில் பெய்த மழை முல்லை நிலத்தில் வெள்ளமாக வந்து இடையர்களை இன்னல்களுக்கு உள்ளாக்கியது.

மரங்களின் கிளைகளை வளைத்து இலைகளைப் பறித்து ஆடு மாடுகளுக்கு இரையாக அளிப்பதற்காக இடையர்கள் வளைந்த கோல்களைக் கொண்டு செல்வது வழக்கம்.  (பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் (பொ.வே. சோ))

ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
ஏறு = காளை;  நிரை = பசுக்களின் கூட்டம்; இன நிரை – ஆடு, பசு, எருமை ஆகிய மூன்று வகையான விலங்குகளைக் குறிக்கிறது.

ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி = எருதுகளோடு, எருமை, ஆடு போன்ற விலங்குகளின் கூட்டத்தை வேறிடத்தில் (மேடானமுல்லை நிலத்தில்) பரவிநிற்குமாறு செய்து (மேயவிட்டு),

புலம்பெயர் புலம்பொடு கலங்கிக். . . .5

புலம் = நிலம்; புலம்பு = தனிமை; கலங்கி = வருத்தம் அடைந்து;
புலம்பெயர் புலம்பொடு கலங்கி = வேற்றிடத்திற்குச் செல்லுதலால், தனிமைத் துயரத்தோடு வருந்தி,

கோடல்  நீடு இதழ்க் கண்ணி நீரலைக் கலாவ 
கோடல் = காந்தள்; கண்ணி = தலையில் அணியும் மாலை; கலாவ = கசங்க, கலைந்து போக

கோடல்  நீடு இதழ்க் கண்ணி நீரலைக் கலாவ = காந்தளின் நீண்ட இதழ்களால் கட்டிய தலையில் அணிந்த மாலை (மழை)நீர் அலைத்தலால் கசங்கிப்போக,

மெய்க்கொள் பெரும் பனி நலியப்
மெய் = உடல்; பனி = குளிர்; நலிய = வருத்துவதால்

மெய்க்கொள் பெரும் பனி நலிய = (தம்)உடம்பை மிகுந்த குளிர்ச்சி வருத்துவதால்,  

பலருடன்  கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
கவுள் = கன்னம் (பல்); புடையூஉ = புடைத்து

பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க =  பலருடன் கூடி, கையில் கொள்ளிக்கட்டைகளைப் பிடித்துக்கொண்டு கன்னங்கள் புடைத்து நடுங்க,

குறிப்பு: கவுள் என்பதற்கு பல் என்ற ஒருபொருளும் உள்ளது. ”கவுள் புடையூ நடுங்க” என்பதற்குக் குளிரால் மேல்வாய்ப் பற்களும் கீழ்வாய்ப் பற்களும் ஒன்றோடு ஒன்று மோதி அடித்து கொண்டன என்றும் பொருள் கொள்ளலாம். (பொ.வே. சோ)

மாமேயல் மறப்ப மந்தி கூரப்
மா = விலங்குகள்; மேயல் = மேய்தல்; மந்தி = குரங்கு; கூர = நுணுக

மாமேயல் மறப்ப மந்தி கூர = விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)கூனிப்போக,

பறவை படிவன வீழக் . . . .10
படிதல் = அமருதல்;

பறவை படிவன வீழ = மரங்களின் கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகள் கீழே விழ,

கறவை கன்று கோள் அழியக் கடிய வீசிக்
கறவை = பால் கொடுக்கும் பசுக்கள்; கடிய = கடுமையாக; வீசி = உதைக்க

 கறவை கன்று கோள் அழியக் கடிய வீசி = கறவை மாடுகள், (தம்)கன்றுகளை ஏற்றுக்கொள்ளுவதைத்  தவிர்த்துக் கடுமையாக உதைக்க,

குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்
குளிர்ப்பன்ன = குளிரவைப்பதுபோல்; கூதிர் = கூதிர் காலம் ( குளிர் காலம்); பானாள் = நள்ளிரவு

குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் = மலையையும் குளிர்விப்பது போன்ற கூதிர்க்காலத்தின் (ஒரு)நள்ளிரவில்

குறிப்பு: “குன்று குளிர்ப்பன்ன” என்றது குளிரின் மிகுதியைக் குறிப்பிடுகிறது.

 

புன் கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்
புன் = சிறிய; முசுண்டை = முசுட்டை (ஒருவகைக் கொடி); பொறி = திரட்சி; வான் பூ = வெண்மையான பூ

புன் கொடி முசுண்டைப் பொறிப்புற வான் பூ = சிறிய முசுட்டைக்கொடியின் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ,

 

பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்
பீரம் = பீர்க்கு; புதல் = புதர்; புதல் புதல் = புதர்கள் தோறும்

பொன்போல் பீரமொடு புதல் புதல் மலரப் = பொன் போன்ற பீர்க்கம் பூக்களோடு புதர்கள் தோறும் மலர்ந்திருக்க,

 

பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி . . . . 15

பைங்கால் = பசுமையான (இளமையான, வலிமையான) கால்; பறை = இறகு; தொழுதி = கூட்டம்
பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி  = வலிமையான கால்களையும் மென்மையான சிறகுகளையும் உடைய கொக்குகளின் கூட்டம், (கொக்கு – crane)

இருங்களி பரந்த ஈர வெண்மணல்
இரு = கரிய; களி = வண்டலின் சேறு

இருங்களி பரந்த ஈர வெண்மணல் = கருமையான வண்டல் சேற்றுமண்  பரவிய வெண்மணலில்,

செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
வரி = கோடு; வாய் = இடம்; கவர = பிடிக்க

செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவர = சிவந்த வரிகளையுடைய நாரைகளுடன், எங்கெல்லாம் மீன்கள் கிடைக்குமோ அங்கு நின்று மீன்களைக் கவர, (நாரை  - stork)

கயல் அறல் எதிரக் கடும்புனல் சாஅய்ப்
கயல் = கயல் மீன்கள்; அறல் = இல்லாமற்போதல்; கடுமை = மிகுதி, விரைவு; புனல் = நீர்; சாஅய் = குறைய

கயல் அறல் எதிரக் கடும்புனல் சாஅய் = கயல் மீன்கள் ஓடும் நீரை எதிர்த்து வரும், பெரும் நீர்ப்பெருக்கு குறைய,

பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
பெயல் = மழை; உலந்து = கெட்டு

பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை = மழை பெய்து ஓய்ந்த பின் மேலெழுந்த, (நுரை)பொங்குதலை(ப்போன்ற) வெண்ணிற மேகங்கள்,
அகல் இரு விசும்பில் துவலை கற்ப . . .20
அகல் = அகன்ற; இரு = பெரிய; விசும்பு = ஆகாயம்; துவலை = நீர்த்துளிகள்; கற்ப = கற்க
அகல் இரு விசும்பில் துவலை கற்ப = அகன்ற பெரிய ஆகாயத்தில் தூவலைத் தூவுவதற்குக் கற்றுக்கொள்வதைப்போல் சிறு தூறலாகத் தூவ
,

ம் கண் அகல் வயல் ஆர்பெயல் கலித்த
அம் =அழகிய ; கண் =இடம்;  அகல் = அகன்ற; ஆர் =நிறைவு; பெயல் = மழை; கலித்த = செழித்த

ங்கண் அகல் வயல் ஆர்பெயல் கலித்த = அழகிய இடங்களையுடைய வயல்களில் நிறைந்த மழை நீரால் செழித்து வளர்ந்த,

 

வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க

வண் தோடு = வளப்பமான தாள்; வணங்க = வளைய

வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க = வளப்பமான தாள்களையுடைய நெல்லிலிருந்து மேலெழுந்த கதிர் (முற்றி)வளைய;

கருத்துரை: உலகம் குளிருமாறு, வலப்புறமாக வளைந்து எழுந்து, மழை பெய்வதில் தவறாத மேகங்கள் புதுமழையைப் பெய்தன. வெள்ளம்போல் மழைநீர் வந்ததை வெறுத்த, வளைந்த கோலையுடைய இடையர்கள், எருதுகளோடு, பசு, எருமை, ஆடு போன்ற விலங்குகளின் கூட்டத்தை வேறிடத்தில் (மேடான முல்லை நிலத்தில்) மேயவிட்டனர். வேறிடத்திற்குச் சென்றதால்,  இடையர்கள் தனிமைத் துயரத்தோடு வருந்தினர். காந்தளின் நீண்ட இதழ்களால் கட்டி, இடையர்கள் தங்கள்  தலையில் அணிந்திருந்த  மாலைகள்  மழைநீர் அலைத்தலால் கசங்கிப்போயின. குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, இடையர்கள் பலரும் கூடி, கையில் கொள்ளிக்கட்டைகளைப் பிடித்துக்கொண்டு சூடேற்றிக் கொண்டார்கள். இருந்தாலும், குளிரின் கொடுமையால், அவர்களின் கன்னங்கள் புடைத்து நடுங்கினர்.

விலங்குகள் மேய்தலை மறந்தன. குரங்குகள் குளிரால் கூனிப்போயின.  பறவைகள் குளிர் தாங்க முடியாமல் மரங்களிலிருந்து கீழ விழுந்தன. கறவை மாடுகள், தம் கன்றுகளுக்குப் பால் கொடுக்காமல் அவைகளைக் கடுமையாக உதைத்தன. மலையையும் குளிர்விப்பதுபோல்  கூதிர்க்காலத்தின் நள்ளிரவு இருந்தது.  

சிறிய முசுட்டைக்கொடியின் வெண்ணிறப் பூக்கள், பொன் போன்ற பீர்க்கம் பூக்களோடு புதர்கள் தோறும் மலர்ந்திருந்தன. வலிமையான கால்களையும் மென்மையான சிறகுகளையும் உடைய கொக்குகளின் கூட்டம், கருமையான வண்டல் சேற்றுமண்  பரவிய வெண்மணலில், சிவந்த வரிகளையுடைய நாரைகளுடன் நின்றுகொண்டிருந்தன.  அவை மழைநீரின் பெருக்குக் குறைந்தவுடன்,  எங்கெல்லாம் மீன்கள் கிடைக்குமோ அங்கு நின்று மீன்களைக் கவர்ந்தன. மழை பெய்து ஓய்ந்த பின் மேலெழுந்த, நுரை பொங்குதலைப் போன்ற வெண்ணிற மேகங்கள், அகன்ற பெரிய ஆகாயத்தில் தூவலைத் தூவுவதற்குக் கற்றுக்கொள்வதைப்போல் சிறு தூறலாகத் தூவிக்கொண்டிருந்தன.  அழகிய  வயல்களில், நிறைந்த நீரால் செழித்து வளர்ந்த, வளமான தாள்களையுடைய நெல்லிலிருந்து மேலெழுந்த கதிர்கள் முற்றி வளைந்து நின்றன.

முழு முதல் கமுகின் மணியுறழ் எருத்தின்
முழு = பருத்த; முதல் = அடிப்பாகம்; கமுகு = பாக்கு; மணி = நீலமணி; உறழ் = போன்ற; எருத்து = கழுத்து

முழு முதல் கமுகின் மணிறழ் எருத்தின் = பருத்த அடிப்பாகத்தையுடைய பாக்கு மரத்தின் நீலமணி போன்ற கழுத்துப் பகுதியில்,

கொழுமடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
கொழு = கொழுத்த; அவிழ்ந்த = விரிந்த; குழூஉ = கூட்டம்; குழூஉக்கொள் பெருங்குலை = கூட்டமாக இருக்கும் பெரிய பாக்குக் குலைகள்

கொழுமடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலைகொழுத்த மடல்களில் கூட்டமாக இருக்கும் பெரிய பாக்குக் குலைகளில்

நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு 

 தெவிள = திரள; வீங்கி = புடைத்து; புடை = பக்கம்

நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு = நுண்ணிய நீர் திரளும்படியாக வீங்கிப் பக்கம் திரண்டு,

தெண் நீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற
பசுங்காய் = பசுமையான காய்; சேறு = இனிமை

தெண் நீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற = தெளிந்த நீர் (கொண்ட) பசுமையான காய் இனிமையாகும்படி முற்ற,

நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக் 
நளிதல் =செறிதல்; சிமை = மலையுச்சி; விரவுதல் = கலத்தல்; வியன் =அகன்ற; கா = சோலை

நளிகொள் சிமைய விரவுமலர் வியன் கா = செறிந்து விளங்கும் மலையுச்சியில் பலவிதமான மலர்கள் கலந்து பூத்திருக்கும் அகன்ற சோலையில்,

குளிர் கொள் சினைய குரூஉத்துளி தூங்க 
சினை = கிளை; குரூஉ = நிறம்; தூங்க = தொங்க

குளிர் கொள் சினைய குரூஉத்துளி தூங்க = குளிர்ச்சியான மரக்கிளைகளில் நிறமுள்ள நீர்த்துளிகள் தொங்க (நீர்த்துளிகள் கிளை மற்றும் இலைகளின் நிறங்களோடு தோன்றுவதால் நிறமுள்ள நீர்த்துளிகள் என்று குறிக்கப்பட்டன),

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் 
ஓங்கிய = உயர்ந்த; மல்லல் = வளமை

மாடம் ஓங்கிய மல்ல் மூதூர் = உயர்ந்த மாடங்களோடு கூடிய வளமான பழைய ஊர்,

ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில் . . .30
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில் = ஆறு கிடந்தால் போன்ற அகன்ற நெடிய தெருவில்,
படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணிதோள்
படலை = தழை; கண்ணி = தலையில் அணியும் மாலை; பரு = பருத்த; ஏர் = அழகு; எறுழ் = வலிமை; திணி = திண்மை

படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணிதோள் = தழையாலான மாலையைத் தலையில் அணிந்து,  பருத்து அழகுடன் விளங்கும் வலிமையான தோள்கள்,

முடலை யாக்கை முழுவலி மாக்கள்
முடலை = முறுக்கிய; யாக்கை = உடல்

முடலை யாக்கை முழுவலி மாக்கள் = முறுக்கிய உடலும், மிகுந்த வலிமையும் உடைய மக்கள்,

வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
மூசுதல் = மொய்த்தல்; சேறல் = கள்; மாந்தி = குடித்து

வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து = வண்டுகள் மொய்க்கும் கள்ளினை மிகுதியாக உண்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு,

துவலைத் தண் துளி பேணார் பகல் இறந்து
துவலை = துளி

துவலைத் தண் துளி பேணார் பகல் இறந்து = தூலாக விழும் குளிர்ந்த மழைத்துளியைப் பொருட்படுத்தாமல், பகற்பொழுதைக் கடந்து

இரு கோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர
கோடு = பக்கம்; அறுவை = ஆடை

இரு கோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர = இரண்டு பக்கமும் (முன்னும் பின்னும்) தொங்கவிடப்பட்ட ஆடையை அணிந்து, விரும்பிய இடமெல்லம் சுற்றித் திரிய,

குறிப்பு: இருகோட்டு அறுவையர் என்பது முன்னும் பின்னும் தொங்கவிடப்பட்ட ஆடை (Toga) அணிந்த யவனர்களைக் குறிப்பிதாகச் சிலர் கருதுகின்றனர்

வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்
வெள்ளி = வெண்மையான; வள்ளி = கைவளை; இறை = முன்கை; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்

வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத்தோள் = வெண்மையான வளையல்களையும், இறுகிய முன்கையையும், மூங்கில் போன்ற தோள்களையும்

மெத்தென் சாயல் முத்து றழ் முறுவல்
மெத்தென் = மெமையான; சாயல் = அழகு; உறழ்= போன்ற; முறுவல் = பல்

மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் = மென்மையான தோற்றத்தையும், முத்தைப் போன்ற பற்களையும்,

பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்
பூங்குழை = அழகான காதணி; ஏந்துதல் = மிகுதல்

பூங்குழைக்கு  மர்ந்த ஏந்து எழில் மழைக்கண் = அழகுடன் விளங்கும் காதணிகளுக்கு ஏற்ப, மிகுந்த அழகும் குளிர்ச்சியும் உடைய கண்களையும்,

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
மடவரல் = பேதைமை; பிடகை = பூந்தட்டு

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த =  பேதைமைத் தன்மை வாய்ந்த  பெண்கள் பூந்தட்டுகளில் இட்டு வைத்த,

செவ்வி ரும்பின் பைங்கால் பித்திகத்து . . .40
செவ்வி அரும்பின் = மலரும் பருவத்தில்; பைங்கால் = பசுமையான காம்பு; பித்திகம் = பிச்சிப்பூ
செவ்வி ரும்பின் பைங்கால் பித்திகத்து = பசுமையான காம்புகளையுடைய பிச்சிப்பூக்களின் மலரும் பருவத்தில் உள்ள அரும்புகள்

அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுது அறிந்து ,
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுது அறிந்து = பூக்களின் இதழ்கள் மலர்வதால் மாலைப்பொழுது வந்தது என்பதை அறிந்து,

இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
கொளீஇ = கொளுத்தி

இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ = இரும்பால் செய்யப்பட்ட விளக்கின் நெய்யில் நனைந்த ஈரமான திரியைக் கொளுத்தி,

நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது 
தூஉய் = தூவி

நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது = நெல்லையும் மலரையும் தூவிக் கையால் தொழுது,

மல்லல் ஆவணம் மாலை யயர 

மல்லல் = வளமை; ஆவணம் = கடைத் தெரு; அயர = கொண்டாட

மல்லல் ஆவணம் மாலை யர = வளமான கடைத்தெருக்களில் மாலைப்பொழுதைக் கொண்டாட

கருத்துரை: நன்கு செழித்து வளர்ந்த பாக்கு மரத்தின் நீலமணி போன்ற கழுத்துப் பகுதியில் உள்ள கொழுத்த மடல்களில், கூட்டமாக இருக்கும் பாக்குக் குலைகளில் உள்ள கொத்துக்களில், உள்ளிருக்கும் நீர் வற்றி, பருத்துப் பசுமையான காய்கள் இனிமையாகும்படி முற்றின. செறிந்து விளங்கும் மலையுச்சியில் பலவிதமான மலர்கள் கலந்து பூத்திருக்கும் அகன்ற சோலையில்  குளிர்ச்சியான மரக்கிளைகளிலிருந்து நீர்த்துளிகள் இடைவிடாமல் சொட்டிக்கொண்டிருந்தன. உயர்ந்த மாடங்களோடு கூடிய வளமான பழைய ஊரில், ஆறு கிடந்தால் போன்ற அகன்ற நெடிய தெருக்கள் இருந்தன.  தழையாலான மாலையைத் தலையில் அணிந்து,  பருத்து அழகுடன் விளங்கும் வலிமையான தோள்களும்,  முறுக்கிய உடலும், மிகுந்த வலிமையும் உடைய மக்கள், வண்டுகள் மொய்க்கும் கள்ளை மிகுதியாக உண்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு, தூறலாக விழும் குளிர்ந்த மழைத்துளிகளைப் பொருட்படுத்தாமல், பகற்பொழுது ழிந்த பிறகும், இரண்டு பக்கமும்  (முன்னும் பின்னும்)தொங்கவிடப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு, விரும்பிய இடமெல்லம் சுற்றித் திரிந்தார்கள்.  வெண்மையான வளையல்களையும், இறுகிய முன்கையையும், மூங்கில் போன்ற தோள்களையும்,  மென்மையான தோற்றத்தையும், முத்தைப் போன்ற பற்களையும், அழகுடன் விளங்கும் காதணிகளுக்கு ஏற்ப, மிகுந்த அழகும் குளிர்ச்சியும் உடைய கண்களையும் உடைய  பேதைமைத் தன்மை வாய்ந்த  பெண்கள், பூந்தட்டுகளில் இட்டு வைத்த,  பசுமையான காம்புகளையுடைய பிச்சிப்பூக்களின் மலரும் பருவத்தில் உள்ள அரும்புகள், மலர்வதால் மாலைப்பொழுது வந்தது என்பதை அறிந்து, இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் நெய்யில் நனைந்த ஈரமான திரியைக் கொளுத்தி, நெல்லையும் மலரையும் தூவிக் கையால் தொழுது, வளமான கடைத்தெருக்களில் மாலைப்பொழுதைக் கொண்டாடினர்.

மனை றை புறவின் செங்காற் சேவல்
மனை றை புறவின் செங்காற் சேவல் = வீட்டில் வாழும் சிவந்த கால்களையுடைய ஆண்புறாக்கள்,

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து ண்ணாது
பெடை = பெண் பறவை; மன்று = பொதுவிடம்

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து ண்ணாது = தாம் இன்புறும் பெண்புறாக்களுடன் கூடி பொதுவிடங்களுக்குச் சென்று இரையைத் தேடி ஆராய்ந்து உண்ணாமல்,

இரவும் பகலும் மயங்கிக் கையற்று
கையற்று = செயலற்று

இரவும் பகலும் மயங்கிக் கையற்று = இரவும் பகலும் மனம் கலங்கிச் செயலற்று,

மதலைப் பள்ளி மாறுவன இருப்பக்
மதலை = வீட்டின் கொடுங்கை (கொடுங்கை = வீட்டின் வெளிப்புறத்தில் கூரைக்கு அடியில் உள்ள நீண்உறுப்புகள். Curved cornice or projection on the sides or in the front of a building); மதலைப் பள்ளி = கொடுங்கையைத் தாங்கும் பலகை; மாறுவன இருப்ப = (கால்களை) மாற்றி மாற்றி இருக்க

மதலைப் பள்ளி மாறுவன இருப்ப = கொடுங்கையைத் தாங்கும் பலகையில் தங்கள் கால்களை மாற்றி மாற்றி இருக்க,

கடியுடை வியல் நகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கடி = காவல்; வியன் = அகன்ற; நகர் = வீடு; தொழுவர் = வேலை செய்பவர்கள்

 கடியுடை வியல் நகர்ச் சிறுகுறுந் தொழுவர் = காவலையுடைய பெரிய வீடுகளில் குற்றேவல் செய்பவர்கள் (பணிபுரிபவர்கள்)

கொள் உறழ் நறுங்கல் பல கூட்டு மறுக . . .50
கொள்  - ஒரு தானிய வகை; உறழ் = போன்ற; நறுங்கல் = நறுமணமிக்க கல்; மறுக = அரைக்க
கொள் உறழ் நறுங்கல் பல கூட்டு மறுக = கொள்ளைப் போன்ற நிறமுடைய மணமுள்ள கல்லில் (அம்மிக் கல்லில்) வாசனைப் பொருள்களின் கலவையை அரைக்க,

வடவர் தந்த வான் கேழ் வட்டம்
வடவர் = வடநாட்டவர்; வான் = வெண்மை; கேழ் = நிறம்; வட்டம் = சிலாவட்டம் (வட்ட வடிவமான சந்தனம் அரைக்கும் கல்)

வடவர் தந்த வான் கேழ் வட்டம் = வடநாட்டவர் தந்த வெண்ணிறமான சந்தனம் அரைக்கும் கற்களில்,

தென்புல மருங்கில் சாந்தொடு துறப்பக்
தென்புல = தென்திசை; மருங்கில் = இடத்தில்

தென்புல மருங்கில் சாந்தொடு துறப்ப = தென்திசையிலிருந்து வந்த சந்தனக் கட்டைகள் அரைக்கப்படாமல் இருக்க,

கூந்தல் மகளிர் கோதை புனையார்
கோதை = மாலை; புனைதல் = அணிதல்

கூந்தல் மகளிர் கோதை புனையார் = மகளிர் தங்கள் கூந்தலில் பூமாலைகளை அணியாதவராய்,

பல் ருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்
இரு = கரிய; பெய்ம்மார் = சூடியிருப்பவர்

பல் ருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார் = அடர்ந்த கரிய கூந்தலில் சில மலர்களை மட்டுமே சூடியிருப்பவர்களாய்

தண் றுந் தகர முளரி நெருப்பு அமைத்து 
தண் = குளிர்ச்சி; தகரம் = வாசனை மரவகை; முளரி = விறகு

தண் றுந் தகர முளரி நெருப்பு அமைத்து = குளிர்ந்த மணமுள்ள மரக்கட்டைகளை விறகாகக்கொண்டு நெருப்பை உண்டாக்கி

இருங்காழ் அகிலொடு வெள் யிர் புகைப்பக்
இரு = கரிய; காழ் = கடினமான (வைரம் பாய்ந்த); அயிர் = புகைக்கும் வாசனைப் பொருள்

இருங்காழ் அகிலொடு வெள் யிர் புகைப்பக் = கரிய வைரம் பாய்ந்த அகிலோடு புகைக்கும் வாசனைப் பொருள்களைக் கலந்து புகைக்க,

கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
கம்மியன் = தொழிலாளி; கவின் = அழகு; புனைந்த = செய்த

கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த = கைவேலைப்படுகளில் சிறந்த தொழிலாளி அழகாகச் செய்த,

செங்கேழ் வட்டம் சுருக்கிக் கொடுந்தறிச்
செங்கேழ் = சிவப்பு நிறம்; வட்டம் = விசிறி; சுருக்கி = ஒடுக்கி; கொடுந்தறி = வளைந்த ஆணி

செங்கேழ் வட்டம் சுருக்கிக் கொடுந்தறி = சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு, வளைந்த ஆணியில்

சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க
சிலம்பி = சிலந்தி; வால் = வெண்மை; வலந்தன = பின்னப்பட்டன; தூங்க = தொங்க

சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க = சிலந்தியின் வெண்மையான நூலால் பின்னப்பட்டு தொங்க,

வான் உற நிவந்த மேனிலை மருங்கின் . . .60
வான் உற = விண்ணைத் தொடும்படி; நிவந்த = உயர்ந்த; மேல் நிலை மருங்கில் = மேல் மாடத்தில்
வான் உற நிவந்த மேனிலை மருங்கின் = விண்ணைத் தொடும்படி உயர்ந்துநின்ற மேல் நிலை மாடங்களில்,

வேனில் பள்ளித் தென்வளி தரூஉம்
வானில் = இளவேனில்; பள்ளி = படுக்கை; தென்வளி = தென்றல்; தரூஉம் = தருகின்ற

வேனில் பள்ளித் தென்வளி தரூஉம் = இளவேனில் காலத்தில் உறங்கும் படுக்கை அறைக்குத் தென்றல் காற்றைத் தரும்

 

நேர் வாய்க் கட்டளை திரியாது
கட்டளை = சாளரம் (சன்னல்); நேர்வாய்க் கட்டளை = காற்று நேராக வருகின்ற சாளரங்கள் (சன்னல்கள்); திரியாது = உலாவாமல்,

நேர் வாய்க் கட்டளை திரியாது = நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள்  வழியாக காற்று போகாமல்

திண் நிலைப் போர் வாய்க் கதவம் தாழொடு துறப்பக்
திண்நிலை = வலிமையான நிலை; போர்வாய்க் கதவம் = பொருந்தியிருக்கும் கதவுகள்; தாழொடு துறப்ப = தாழிட்டுக் கிடக்க (திறவாமல் இருக்க)

திண் நிலைப் போர் வாய்க் கதவம் தாழொடு துறப்ப = திண்மையான  நிலைவாசலில் பொருந்தியிருக்கும் ரட்டைக் கதவுகள்  திறக்கப்படாமல், தாழிட்டுக் கிடக்க,

கல்லென் துவலை தூவலின்

 கல் = ஒலிக்குறிப்பு; துவலை = மழைத் தூறல்

கல்லென் துவலை தூவலின் =  ‘கல்'லென்கிற ஓசையுடன் மழை நீர்த்திவலைகளைத் தூவுவதால்,

யாவரும் தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்
தொகுவாய் = குவிந்த வாய்; கன்னல் = குடம்

யாவரும் தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் = ஒருவருமே குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடிக்காமல்

பகுவாய்த் தடவில் செந் நெருப்பு ஆ
பகுவாய் = அகன்ற வாய்; தடவு = தூபமூட்டி; ஆர = நுகர

பகுவாய்த் தடவில் செந் நெருப்பு ஆ = அகன்ற  வாயையுடைய கணப்புச்சட்டியின் (தூபமூட்டியின்) சிவந்த நெருப்பின் (வெம்மையை)நுகர,

கருத்துரை: வீட்டில் வாழும் சிவந்த கால்களையுடைய ஆண்புறாக்கள், தாம் இன்புறும் பெண்புறாக்களுடன் கூடிப் பொதுவிடங்களுக்குச் சென்று இரையைத் தேடி ஆராய்ந்து உண்ணாமல் இருந்தன.  இரவும் பகலும் மனம் கலங்கிச் செயலற்று, கொடுங்கையைத் தாங்கும் பலகையில் அந்தப் புறாக்கள் தங்கி இருந்தன. காவலையுடைய பெரிய வீடுகளில் குற்றேவல் செய்பவர்கள் (பணிபுரிபவர்கள்), கொள்ளைப் போன்ற நிறமுடைய மணமுள்ள கல்லில் (அம்மிக் கல்லில்) வாசனைப் பொருள்களின் கலவையை அரைத்தனர். வடநாட்டவர் தந்த வெண்ணிறமான சந்தனம் அரைக்கும் கற்களில் தென்திசையிலிருந்து வந்த சந்தனக் கட்டைகள் அரைக்கப்படாமல் இருந்தன. மகளிர் தங்கள் கூந்தலில் பூமாலைகளை அணியவில்லை. அவர்கள் தங்களின்  அடர்ந்த கரிய கூந்தலில் சில மலர்களை மட்டுமே சூடியிருந்தார்கள்.  குளிர்ந்த மணமுள்ள மரக்கட்டைகளை விறகாகக்கொண்டு, நெருப்பை உண்டாக்கி , கரிய,  வைரம் பாய்ந்த அகிலோடு வெண்மையான வாசனைப் பொருள்களைக் கலந்து புகைத்தனர். கைவேலைப்பாடுகளில் சிறந்த தொழிலாளி அழகாகச் செய்த,  சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு, வளைந்த ஆணியில் தொங்கிக்கொண்டிருந்து.  விண்ணைத் தொடும்படி உயர்ந்துநின்ற மேல்நிலை மாடங்களில், இளவேனில் காலத்தில் உறங்கும் படுக்கை அறைக்குத் தென்றல் காற்றைத் தரும்,  நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள் திறக்கப்படாமல் இருந்தன. திண்மையான  நிலைவாசலில் பொருந்தியுள்ள இரட்டைக் கதவுகள் தாழிட்டுக் கிடந்தன.  ‘கல்'லென்கிற ஓசையுடன் நீர்த்திவலைகளை மழை தூவுவதால்,  அனைவரும் குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடிக்காமல், அகன்ற  வாயையுடைய கணப்புச்சட்டியின் (தூபமூட்டியின்) சிவந்த நெருப்பின் வெப்பத்தை நுகர்ந்தனர்.

ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
புணர்மார் = கூட்டுதற்கு

ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார் = ஆடல் மகளிர் தாம் பாடுகின்ற பாடலுக்குப் பொருந்த  யாழின் நரம்பைக் கூட்டுதற்கு,

தண்மையின் திரிந்த இன்குரல் தீந்தொடை
தண்மை = குளிர்ச்சி; தொடை = யாழின் நரம்பு

தண்மையின் திரிந்த இன்குரல் தீந்தொடை = குளிர்ச்சியால் நிலைகுலைந்த இனிய குரலை எழுப்பும் இனிய நரம்பை,

கொம்மை வருமுலை வெம்மையிற் டைஇக்
கொம்மை = பெருமை; தடைஇ = தடவி

கொம்மை வருமுலை வெம்மையிற் டைஇக் = தங்களின் பருத்து எழுந்த முலைகளின் வெப்பத்தில் தடவி;

கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் . .70
கருங்கோடு = கரிய தண்டு; சீறியாழ் = சிறிய யாழ்; பண்ணுமுறை நிறுப்ப = பண்ணுக்கு ஏற்றவாறு முறைப்படுத்தி நிறுத்த
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப = கரிய ண்டினையுடைய சிறிய யாழைப் பண்ணினை இசைப்பதற்கு ஏற்றவாறு முறைப்படுத்தி நிறுத்த,

காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல் கனைந்து
புலம்ப = வருந்த; கனைந்து = மிகுதியாகி

காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல் கனைந்து = கணவரைப் பிரிந்த மகளிர் வருந்த, மழை மிகுதியாகப் பெய்து,

கூதிர் நின்றன்றால்

 கூதிர் = பனிக்காற்று; நின்றன்றால் = நிலைபெற்றது

கூதிர் நின்றன்றால் = கூதிர்க்காலமாய் நிலைபெற்றது

 போதே மாதிரம்
மாதிரம் = திசை

- அப்பொழுது, திசைகள்(எல்லாவற்றிலும்),

விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
வியல் = அகன்ற; மண்டிலம் = கதிரவன்

விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் = தன்னுடைய விரிந்த கிகதிர்களைப் பரப்பி அகன்ற இடத்தையுடைய ஞாயிறு

இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு,

இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு = நடப்பட்ட இரண்டு கோல்களின் நிழல்கள் ஒன்றும் வகையில் (அதாவது உச்சி வேளையில்),

ருதிறம் சாரா அரைநாள் அமயத்து . . . 75

திறம் = பக்கம்; சாரா = சாராத; அரைநாள் = உச்சி நேரம்
ருதிறம் சாரா அரைநாள் அமயத்து = ஒரு பக்கத்தைச் சாராத உச்சியில் இருக்கும் நண்பகல் நேரத்தில்

 குறிப்பு: ஒரு ஊரில் உச்சி நேரம் எது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு சங்க காலத்தில் தமிழர்கள் ஒரு உத்தியைக் கையாண்டார்கள். ஒரு பலகையில், ஒரு குச்சியை வடக்கிலும் ஒரு குச்சியை தெற்கிலும் நட்டு, அவற்றின் நிழல்கள் காலையில் மேற்குப் பக்கமாகவும், மாலையில் கிழக்குப் பக்கமாகவும் சாய்ந்து இணைகோடுகளாக இருப்பதைக் காணலாம். உச்சி நேரத்தில் மட்டுமே குச்சிகளின் நிழல்கள் ஒரே கோட்டில் இருக்கும். இங்கு, அரண்மனை கட்ட ஆரம்பித்த நேரம் உச்சி நேரம் என்பது பொருள்.

நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டுத்
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு = கட்டிடக்கலை நூலை அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேரே பிடித்து

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கிப்
தேஎம் = திசை

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கிப் = திசைகளைக் குறித்துக்கொண்டு, அத்திசைகளில் உள்ள  தெய்வங்களை கருத்தில் கொண்டு

பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து = பெரும் புகழ்பெற்ற அரசர்க்குத் தகுந்தவகையில் அரண்மனையின் பாகங்களைப் பகுத்துக்கொண்டு,

ஒருங்கு டன் வளைஇ ஓங்குநிலை வரைப்பின்
வளைஇ = வளைத்து; வரைப்பு = மதில்

ஒருங்கு டன் வளைஇ ஓங்குநிலை வரைப்பின் =  ஒரு சேர இவ்விடங்களையெல்லாம் வளைத்து, உயர்ந்த நிலையையுடைய மதிலில்,

பரு ரும்பு பிணித்துச் செவ்வரக்கு ரீஇத் . . .80
செவ்வரக்கு = செம்மையான அரக்கு; உரீஇ = வழித்து
பரு ரும்பு பிணித்துச் செவ்வரக்கு ரீஇத் = பெரிய (ஆணிகளால்) இரும்பால் இணைத்து, அரக்கைப் பூசி வழித்து,

துணைமாண் கதவம் பொருத்தி இணை மாண்டு
கதவம் = கதவு;இணைமாணடு = இணைந்து நன்கு விளங்கி

துணைமாண் கதவம் பொருத்தி இணை மாண்டு = இரண்டாக அமைந்துள்ள சிறந்த கதவுகளை நிலையோடு பொருத்தி, இணைந்து நன்கு விளங்கி;

நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்துப்
நாளொடு பெயரிய = நட்சித்திரத்தின் பெயரைக்கொண்ட (இங்கு உத்திரம் என்ற நட்சத்திரத்தைக் குறிக்கிறது); கோள் = வலிமை; கோள் அமை = வலிமை பொருந்திய; விழுமரம் = சிறந்த மரம்

நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்துப் = உத்திரம் என்ற விண்மீனின் (நட்சத்திரத்தின்) பெயரைக்கொண்ட வலிய மரத்தில்,

போது அவிழ் குவளைப் புதுப்பிடி கால் அமைத்துத்
போது = அரும்பு; அவிழ்தல் = மலர்தல்; புதுப்பிடி கால் அமைத்து = புதிய கைப்பிடியைப் பொருத்தி

போது அவிழ் குவளைப் புதுப்பிடி கால் அமைத்து = மலரும் பருவத்திலுள்ள குவளை மலரின் அரும்பு போன்ற புதிய கைப்பிடிகளைப் பொருத்தி,

தாழொடு குயின்ற போர்அமை புணர்ப்பின்
குயின்ற = பதித்த

தாழொடு குயின்ற போர்அமை புணர்ப்பின் = தாழ்ப்பாளோடு சேர்த்துப் பதித்த,

கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து . . . 85

கைவல் = கைத்தொழிலில் வல்லமை பொருந்திய; கம்மியன் = தச்சன்; புரைதீர்ந்து = குற்றமின்றி (இடைவெளியின்றி)

கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து  = கைத்தொழிலில் வல்லமை பொருந்திய தச்சன் ஆணிகளை நன்றாக முடுக்கியதால் இடைவெளியற்று,

கருத்துரை: ஆடல் மகளிர் தாம் பாடுகின்ற பாடலுக்குப் பொருந்த யாழின் நரம்பைக் கூட்டுதற்கு, குளிர்ச்சியால் நிலைகுலைந்த இனிய குரலை எழுப்பும் இனிய நரம்பை,
தங்களின் பருத்து எழுந்த முலைகளின் வெப்பத்தில் தடவி, கரிய ண்டினையுடைய சிறிய யாழைப் பண்ணை இசைப்பதற்கு ஏற்றவாறு முறைப்படுத்திக்கொண்டனர்.
கணவரைப் பிரிந்த மகளிர் வருந்துமறு,ழை மிகுதியாகப் பெய்து, குளிர்காலம் நிலைபெற்றிருந்தது. அப்பொழுது, திசைகள்(எல்லாவற்றிலும்), தன்னுடைய விரிந்த கதிர்களைப் பரப்பி அகன்ற இடத்தையுடைய ஞாயிறு, நடப்பட்ட இரண்டு கோல்களின் நிழல்கள் ஒன்றும் வகையில், கிழக்கிலிருந்து மேற்கே செல்வதற்காக, ஒரு பக்கத்தைச் சாராத உச்சியில் இருக்கும் நண்பகல் நேரத்தில், கட்டிடக்கலை நூலை அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேரே பிடித்து, திசைகளைக் குறித்துக்கொண்டு, அத்திசைகளில் உள்ள  தெய்வங்களை கருத்தில் கொண்டு,  பெரும் புகழ்பெற்ற அரசர்க்குத் தகுந்தவகையில், அரண்மனையின் பாகங்களைப் பகுத்துக்கொண்டு,  ஒரு சேர இவ்விடங்களையெல்லாம் வளைத்து, உயர்ந்த நிலையையுடைய மதிலை அமைத்தனர். அந்த மதிலின் நிலையோடு பெரிய (ஆணிகளால்) இரும்பால் இணைக்கப்பட்ட, சாதிலிங்கத்தைப் (சாதிலிங்கம் – அரக்கு) பூசிய, இரண்டாக அமைந்துள்ள சிறந்த கதவுகளைப் பொருத்தினார்கள். அவை நிலையோடு இணந்து இடைவெளியில்லாமல் இருந்தன. உத்தரம் என்ற விண்மீனின் (நட்சத்திரத்தின்) பெயரைக்கொண்ட குறுக்குக் கட்டை (விட்டம்) சிறந்த வலிய மரத்தால் செய்யப்பட்டிருந்தது. அக்கதவுகளில், மலரும் பருவத்தில் உள்ள குவளை மலரின் அரும்பு போன்ற புதிய கைப்பிடிகள் பொருத்தப்பட்டிருந்தன. கைத்தொழிலில் வல்லமை பொருந்திய தச்சன் ஆணிகளை நன்றாக முடுக்கியதால் கதவுகளுக்கிடையே இடைவெளியில்லாமல் இருந்தது.

ஐயவி ப்பிய நெய்யணி நெடு நிலை 
ஐயவி = சிறிய வெண்கடுகு; நிலை = நிலைவாயில்

ஐயவி ப்பிய நெய்யணி நெடு நிலை  = சிறிய வெண்டுகுகளை அப்பிவைத்து  நெய் தடவிய  நெடிய நிலையினையுடைய,

வென்று எழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்
வேழம் = யானை

வென்று எழு கொடியோடு வேழஞ் சென்றுபுக = வெற்றிகொண்டு உயரும் கொடிகளோடு யானைகள் போய் நுழையும்படி உயர்ந்த,
குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில்
குயின்றன்ன = குடைந்தாற் போன்ற

குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில் = மலையைக் குடைந்து செய்ததைப் போன்ற உயர்ந்த நிலைகளை உடைய வாயில்களையும்,

திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தீதுதீர் = குற்றமற்ற

திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின் = செல்வம் (திருமகள்)  நிலைபெற்ற குற்றமற்ற தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து . . .90
தருமணல் = கொண்டுவந்த மணல்; ஞெமிறிய = பரப்பிய; நகர் = வீடு
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து  = கொண்டுவந்த மணல் பரப்பப்பட்ட அழகிய வீட்டின் முற்றத்தில்
,

நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
எகின் = கவரிமா; தூ = வெண்மை; ஏற்றை =ஏறு (விலங்குகளின் ஆண்)

நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை = நீண்ட மயிரையுடைய வெண்மையான ஆண்கவரிமாவும்,

குறுங்கால் அன்னமோடு களும்  முன்கடைப்
உகளும் = தாவும்; முன்கடை = முன் வாயில்

குறுங்கால் அன்னமோடு களும்  முன்கடை = குறுகிய கால்களையுடைய அன்னத்தோடு தாவித் திரியும் முன்வாசலையும் உடையதாய்,

பணைநிலை முனைஇய பல்ளைப் புரவி
பணை = குதிரைகள் தங்கியிருக்கும் இடம் (கொட்டில்); முனைஇய = வெறுத்த; உளை = குதிரை சிங்கம் போன்றவற்றின் பிடரி மயிர்; புரவி = குதிரை

 பணைநிலை முனைஇய பல்ளைப் புரவி = கொட்டிலில் நிற்பதை வெறுத்த, நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்

புல் ணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
உணா = உணவு; தெவிட்டுதல் = குதட்டுதல் = மென்று தின்னுதல்; புலம்பு = தனிமை;

புல் ணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு = புல்லாகிய உணவை மென்று தின்னும் பொழுது ஏற்படும் தனிமை அமைதியைக் கெடுக்கும் ஓசையோடு

நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக் . . . 95
நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து = நிலவின் பயனை அரசன் நுகரும் நெடிய வெண்முற்றத்திலுள்ள

 கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறையக்
கிம்புரி = நீர் விழுதற்கு சுறாமீன் வடிவில் அமைக்கபட்ட குழாய்; அம்பணம் = நீர் விழும் குழாய்

கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறையக் = சுறாமீனின் பிளந்தவாய் போன்ற குழாயிலிருந்து வரும் நீர் விழுகின்ற பாத்திரம் நிறைவதால்,

லிழ்ந்து வீழ் அருவிப் பாடு இறந்து அயல
கலிழ்ந்து = கலங்கி; பாடு = ஓசை; இறந்து = மிகுந்து, அயல = அருகில்

லிழ்ந்து வீழ் அருவிப் பாடு இறந்து அயல = கலங்கி விழுகின்ற அருவியின் ஒசையைப்போல் செறிந்து, அதற்கு அருகில் உள்ள,

ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல்
ஒலி = தழைத்த; பீலி = மயில் தோகை; ஒல்க = அசைய

ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல் = தழைத்த நெடிய தோகையும், மெல்லிய இயல்பினையும் உடைய,

கலி மயில் அகவும் வயிர் மருள் இன்னிசை
கலி = செருக்கு; அகவுதல் = கூவுதல்; வயிர் = ஊதுகொம்பு;

கலி மயில் அகவும் வயிர் மருள் இன்னிசை =  செருக்கின மயில் ஆரவாரிக்கும் ஓசை ஊதுகொம்பின் ஓசையோ என்று எண்ணத்தோன்றும் இனிய ஓசை,

நளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் . . .100

நளி = அடர்ந்த; சிலம்பு = ஆரவாரம்

நளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில்  = அடர்ந்த மலையில் காணப்படும் ஆரவாரம்போல   ஆரவாரிக்கும் அரண்மனை

கருத்துரை: நெடிய வாயிலில் வெண்சிறுகடுகுகளை அரைத்து அப்பி, நெய் தடவியிருந்தனர். அந்த வாயில், வெற்றிக்கொடியைத் தாங்கிவரும் யானைகள் அரண்மனைக்குள் நுழையும்படி உயர்ந்ததாக இருந்தது.  மலையைக் குடைந்து செய்ததைப் போல் இருந்த வாயில் திருமகள் நிலைபெற்று விளங்கும் குற்றமற்ற சிறப்புடையதாகவும் இருந்தது. அத்தகைய சிறப்புடைய வாயிலையுடைய மாளிகையின்முன் உள்ள முற்றத்தில் வெண்மணல் பரப்பப்பட்டிருந்தது.  அந்த முற்றத்தில், நீண்ட மயிரையுடைய வெண்மையான ஆண்கவரிமாக்களும், குறுகிய கால்களையுடைய அன்னங்களும் தாவித் திரிந்துகொண்டிருந்தன. அங்கே, கொட்டிலில் நிற்பதை வெறுத்த, நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள், புல்லை மென்று தின்னும் பொழுது தனிமைத் துயரத்தில் கனைத்தன. நிலவின் பயனை அரசன் நுகரும் நெடிய வெண்முற்றத்திலுள்ள, சுறாமீனின் பிளந்தவாய் போன்ற குழாயிலிருந்து வரும் நீர் விழுகின்ற பாத்திரம் நிறைவது, கலங்கி விழுகின்ற அருவியின் ஒசையைப்போல் ஒலித்தது. அதற்கு அருகில், தோகையை விரித்து, கூவுகின்ற மெல்லிய இயல்பையுடைய மயிலின் ஓசை ஊதுகொம்பின் ஓசையோ என்று எண்ணத் தோன்றுவதுபோல் இருந்தது.  இந்த ஒசைகள், அடர்ந்த மலையில் காணப்படும் ஆரவாரம்போல அந்த மாளிகையில் முழங்கின.

யவனர் இயற்றிய வினை மாண் பாவை
யவனர் = கிரேக்கர்/ ரோமானியர்; மாண்பாவை = சிறந்த பாவை விளக்கு

யவனர் இயற்றிய வினை மாண் பாவை = யவனர் செய்த சிறந்த வேலைப்படுகளுடன் விளங்கும் பாவை விளக்கின்,

கை ந்தும் ஐ கல் நிறைய நெய் சொரிந்து
ஐ = வியப்பு

கை ந்தும் ஐ கல் நிறைய நெய் சொரிந்து  = கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத்தரும் அழகுடைய அகல் விளக்கில்  நிறைய நெய்யை ஊற்றி,

பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி
பரூஉத்திரி = பருத்த திரிகளை; கொளீஇ = கொளுத்தி; குரூஉ = நிறம்

 பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி = பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை,

அறுஅறு காலை தோறு அமைவரப் பண்ணிப்
அறுஅறு காலை = நெய்யும் சுடரும் குறையும் பொழுதெல்லாம்; அமைவரப் பண்ணி = நெய் பெய்தும் திரியிட்டுத் தூண்டியும் திருத்தி (நன்கு எரியுமாறு செய்து)

அறுஅறு காலை தோறு அமைவரப் பண்ணிப் = (நெய்)குறையும் போதெல்லாம் (நெய்வார்த்துத் திரிகளைத்) தூண்டி(ச் சரிப்படுத்தி),

பல்வேறு பள்ளிதொறும் பாய்இருள் நீங்கப் . . .  105

பள்ளி = இடம்; பாய் இருள் = பர விய இருள்
பல்வேறு பள்ளிதொறும் பாய்இருள் நீங்க =
(அரண்மனையின்)பலவேறு இடங்கள் தோறும் பரந்த இருள் நீங்கும்படி,

பீடுகெழு சிறப்பின் பெருந்தகை ல்லது
பீடு = பெருமை; கெழு = பொருந்திய; பெருந்தகை = மன்னன்

 பீடுகெழு சிறப்பின் பெருந்தகை ல்லது = பெருமை பொருந்தி தலைமையினையுடைய மன்னனைத் தவிர,

ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்
வரைப்பு = எல்லை

ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் =   மற்ற ஆண்கள் எவரும் அருகே வரமுடியாதபடி  காவலையும் எல்லையும் உடையதாக அரண்மனையின் அந்தப்புரம் இருந்தது.

வரை கண்டன்ன தோன்றல வரை சேர்பு
வரை = மலை; சேர்பு = சேர்ந்து

வரை கண்டன்ன தோன்றல வரை சேர்பு = அந்தப்புரம் மலைகளைக் காண்பதுபோல் உயர்ச்சியுடையதாக இருந்தது. அங்கு மலைகளைச் சேர்ந்து, 

வில் கிடந்தன்ன கொடிய
கொடிய = கொடிகளையுடைய

வில் கிடந்தன்ன கொடிய  = வானவில் கிடப்பதுபோல் பலநிறக் கொடிகளும் அசைந்தன

பல்வயின் வெள்ளி ன்ன விளங்கும் சுதை ரீஇ . . .110
வயின் = இடம்; சுதை = சாந்து; உரீஇ = பூசி
பல்வயின் வெள்ளி ன்ன விளங்கும் சுதை ரீஇ = பல இடங்களிலும் வெள்ளியைப் போல் விளங்கும்  சாந்தைப் பூசி,

மணி கண்டன்ன மாத்திரள் திண்காழ்ச்
மணி கண்டன்ன = நீலமணியைக் காண்பது போன்ற; மா = கரிய; திண் = வலிமையான

மணி கண்டன்ன மாத்திரள் திண்காழ் = நீலமணியைக் காண்பதுபோல், கரிய திரண்ட வலிமையான தூண்களும்,

செம்பு இயன் றன்ன செய்வு று நெடுஞ்சுவர்
இயன்றன்ன = உருவாக்கப்பட்டதுபோல்; செய்வு உறு = செய்யப்பட்ட

செம்பு இயன் றன்ன செய்வு று நெடுஞ்சுவர் = செம்பினால் செய்யப்பட்டது போன்ற  உயர்ந்த சுவர்,

உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்
வளைஇ = சுற்றி

உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக் = பல்வேறு வடிவமுடைய பூக்களும் ஒரு கொடியைச் சுற்றி இருத்தல்,

கருவொடு பெயரிய காண்புஇன் ல்ல்

கருவொடு பெயரிய = கரு தங்கும் அறை (கருவறை); காண்பு = காண்பதற்கு

கருவொடு பெயரிய காண்புஇன் ல்ல் = கருவோடு பெயர்பெற்ற காட்சிக்கினிய நல்ல இல் (கர்ப்பக் கிருகம் - கருவறை),

 

கருத்துரை: யவனர் செய்த சிறந்த வேலைப்படுகளுடன் விளங்கும் பெண்சிலையின், கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத்தரும் அழகுடைய அகல் விளக்கில்  நிறைய நெய்யை ஊற்றி, பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை, (நெய்)குறையும் போதெல்லாம் (நெய்வார்த்துத் திரிகளைத்) தூண்டி(ச் சரிப்படுத்தி), (அரண்மனையின்)பல்வேறு  இடங்கள்தோறும் பரந்த இருள் நீங்கும்படி செய்தனர். பெருமை பொருந்தி தலைமையினையுடைய மன்னனைத் தவிர, மற்ற ஆண்கள் எவரும் அருகே வரமுடியாதபடி  காவலையும் எல்லையும் உடையதாக அரண்மனையின் அந்தப்புரம் இருந்தது. அந்த அந்தப்புரம் மலைகளைக் காண்பதுபோல் உயர்ச்சியுடையதாக இருந்தது. அங்கு, மலைகளைச் சேர்ந்து,  வானவில் கிடப்பதுபோல் பலநிறக் கொடிகளும் அசைந்தன. பல இடங்களிலும் வெள்ளியைப் போன்ற சாந்தைப் பூசி, நீலமணியைக் காண்பதுபோல், கரிய திரண்ட வலிய தூண்களும் இருந்தன.  செம்பினால் செய்யப்பட்டது போன்ற உயர்ந்த சுவரில், பல்வேறு வடிவமுடைய பூக்களும் ஒரு கொடியைச் சுற்றி இருப்பது போன்ற சித்திரம் வரையப்பட்டிருந்தது. இவ்வாறு, காண்பதற்கு இனிய நல்ல இல்லமாக கருவறை என்று பெயர்பெற்ற அந்தப்புரம் காட்சி அளித்தது.


தச நான்கு எய்திய பணைமருள் நோன்தாள் . . . 115
தசம் = பத்து ; தச நான்கு = நாற்பது (இங்கு நாற்பது  ஆண்டுகளைக் குறிக்கிறது); பணை = முரசு; மருளுதல் = வியத்தல்; நோன் =  வலிய; தாள் = கால்

தச நான்கு எய்திய பணைமருள் நோன்தாள் = நாற்பது ஆண்டு காலம் வாழ்ந்த, முரசு போன்ற வலிய கால்களையும்

இகல் மீக்கூறும் ஏந்தெழில் வரிநுதல்
இகல் = போர்; மீக்கூறல் = புகழ்தல்; ஏந்தெழில் = மிகுந்த அழகு; நுதல் = நெற்றி

இகல் மீக்கூறும் ஏந்தெழில் வரிநுதல் = போரில் சிறந்த யானை என்று புகழப்படும் மிகுந்த அழகும் வரிகளையுடைய நெற்றியும்

 பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து
பொருது ஒழி = போரிட்டு இறந்த; நாகம் = யானை; ஒழி எயிறு = தாமாகவே விழுந்த; எயிறு = யானையின் தந்தம்; அருகுதல் = குறைதல் ; எறிதல் அறுத்தல்; அருகு எறிந்து = சீவிச் சரிசெய்து

பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து = போரில் இறந்த யானையின் தாமே விழுந்த தந்தங்களைச் சீவிச் சரிசெய்து,

சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
சீர் = அழகு; செம்மை = பெருமை

சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் = அழகும் செம்மையும் பொருந்தி விளங்குமாறு, தொழில் வல்ல தச்சனால்

கூர் உளிக் குயின்ற ஈர்இலை டை டுபு
குயின்ற =குடைந்த, செதுக்கிய; ஈர்இலை = இரண்டு இலைகள்; இடை இடுப = இடையே இட்டு

கூர் உளிக் குயின்ற ஈர்இலை டை டுபு = கூர்மையான உளியால் செதுக்கிய இரண்டு  இலை வடிவம் இடையே இட்டு
தூங்கு இயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் . . .120

வீங்கு முலை = பருத்த முலை;

தூங்கு இயல் வீங்கு முலை கடுப்ப = கருப்பம் முதிர்ந்து அசையும் இயல்புடைய மகளிரின் பால் கட்டிப் பக்கங்கள் பருத்த முலைகளைப் போன்ற (பொ. வெ. சோமசுந்தரனார்)
புடைதிரண்டு இருந்த குடத்த இடைதிரண்டு
புடை = பக்கம்; குடத்த = குடத்தை உடையதாய்

புடைதிரண்டு இருந்த குடத்த இடைதிரண்டு = பக்கம் திரண்டிருந்த குடத்தை உடையதாய் கட்டிலுக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி செய்யப்பட்டிருந்தது.
உள்ளி நோன்முதல் பொருத்தி அடி மைத்து

உள்ளி = பூண்டு;

உள்ளி நோன்முதல் பொருத்தி அடி மைத்து =  பூண்டின் வலிமையான அடிப்பாகத்தைப் போல் பொருத்தமுற விளங்க

பேர் அவு ய்திய பெரும் பெயர்ப் பாண்டில் 
பாண்டில் = வட்ட வடிவமான கட்டில்

பேர் அவு ய்திய பெரும் பெயர்ப் பாண்டில் = அகன்ற அளவுடன் உருவாக்கப்பட்ட பாண்டில் என்னும் வட்ட வடிவமான கட்டில்


மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு

மடை = மூட்டுவாய் (முத்துமாலைகளைக் கட்டிலோடே மூட்டும் இடம்); மாண் = மாட்சிமைப்பட்ட; நுண் இழை பொலிய = நுண்ணிய நூல் அழகுறுமாறு; தொடை  = தொடுத்த; மாண்டு = மாட்சிமைப்பட்டு

மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு = கட்டிலோடு சேர்த்துக் கட்டப்பட்ட முத்துமாலைகளை, நுண்ணிய நூலால் அழகாகத் தொடுத்து,

முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப் . . . 125
சாலேகம் = சன்னல்; நாற்றி = தொங்கவிட்டு; குத்துறுத்து = குத்தப்பட்ட

முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்து = கட்டிலைச் சுற்றி சாளரம் போல் அழகாகத் தொங்கவிட்டிருந்தனர்

 புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
பூ = அழகு; கேழ் = நிறம்; தட்டம் = தட்டு

புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்து = புலியின் உருவம் பொறிக்கப்பட்ட அழகான நிறமுள்ள தட்டுகளைப்போன்ற

தகடு கண் புதையக் கொளீஇத்
கொளீஇ = கொள்ளச் செய்து;

தகடு கண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து = தகடுகளால் கட்டிலின் மேலிடம் மறைக்கப்பட்டுள்ளது.
துகள்தீர்ந்து ஊட்டுறு பன்மயிர் விரைஇ
துகள் = குற்றம்

துகள்தீர்ந்து ஊட்டுறு பன்மயிர் விரைஇ = குற்றமற்ற பலநிறங்களும் ஊட்டப்பட்ட பலவாகிய மயிர்களைக் கலந்து உருவாக்கப்பட்ட கட்டிலின் விரிப்பில்

வயமான் வேட்டம் பொறித்து
வயமான் = சிங்கம்; வேட்டம் = வேட்டை;

வயமான் வேட்டம் பொறித்து = சிங்கம் வேட்டையாடுவதைப் போன்ற உருவம் பொறித்து

வியன்கண் கானத்து முல்லைப் பல்போது உறழப் பூ நிரைத்து . . .130
வியன்கண் = அகன்ற இடம்; கானம் = காடு

வியன்கண் கானத்து முல்லைப் பல்போது உறழப் பூ நிரைத்து =அதன்மீது, அகன்ற காட்டிலே மலரும் முல்லையோடு பல்வேறு மலர்களையும் இடையே சேர்த்துப் பரப்பியதைப் போன்ற உருவம் வரையப்பட்ட போர்வையைப் போர்த்திய

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
சேக்கை = படுக்கை (போர்வை)

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட = மென்மையான படுக்கைக்கு மேலாக,


துணைபுணர் அன்னத் தூ நிறத் தூவி
துணைபுணர் = தூணையைக் கூடின

துணைபுணர் அன்னத் தூ நிறத் தூவி = தன் துணையைப் புணர்ந்த அன்னங்களின் சிறகினால் இட்டுச் செய்த

 இணை ணை மேம்படப் பாய் அணை ட்டுக்
இணை அணை =  இணைத்த மெத்தை

இணை ணை மேம்படப் பாய் அணை ட்டு = மெத்தைகள் சிறப்புறுமாறு தலையணையை இட்டு

காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
காடி = கஞ்சி; கலிங்கம் = ஆடை

காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து = கஞ்சியிட்டுக் கழுவிய துணி (போர்வை)
தோடு அமை தூமடி விரித்த சேக்கை . . . 135

தோடு = மலர்களின் இதழ்கள்; தூமடி = தூய்மையாக மடிக்கப்பட்டிருந்த; சேக்கை = படுக்கை

மலரின் இதழ்கள் உள்ளே வைத்து தூய்மையாக மடிக்கப்பட்டிருந்தது. அந்தப் போர்வை படுக்கையில் விரிக்கப்பட்டிருந்தது.

கருத்துரை: நாற்பது ஆண்டு காலம் வாழ்ந்த, முரசு போன்ற வலிய கால்களும், போரில் சிறந்த யானை என்று போற்றப்பட்ட, மிகுந்த அழகும், வரிகளையுடைய நெற்றியும் கொண்ட போரில் இறந்த யானையின், தாமே வீழ்ந்த தந்தங்களைச் சீவிச் சீர்படுத்தி, அழகும் செம்மையும் பொருந்தி விளங்குமாறு, திறமையான தச்சன் கூரிய சிற்றுளியால் குடைந்து செய்த இரண்டு இலை வடிவம் இடையே இட்டு தலைவியின் கட்டில் உருவாக்கப்பட்டிருந்தது.

கருப்பம் முதிர்ந்து அசையும் இயல்புடைய மகளிரின் பால் கட்டிப் பக்கங்கள் பருத்த முலைகளைப் போல், பக்கங்களில் திரண்டிருக்கும்  குடத்தை உடையதாக கட்டிலுக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி இருந்தது. பூண்டின் வலிமையான அடிப்பகுதி போன்று கட்டிலின் காலின் அடிப்பகுதி பொருத்தமாக விளங்க, அகன்ற அளவுகளைக் கொண்ட பெரும்புகழ்பெற்ற வட்ட வடிவமான கட்டில் அமைந்திருந்தது. உயர்ந்த நுண்ணிய நூலால் கோத்த முத்து வடங்களை நான்கு பக்கமும் சாளரம் போல் தொங்கவிட்டிருந்தனர். புலியின் உருவம் பொறிக்கப்பட்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டுகளைப் போன்ற தகடுகளால் கட்டிலின் மேலிடம் மறையும்படி அமைத்திருந்தனர். குற்றமற்சாயம் ஏற்றப்பட்ட பல மயிர்க்கற்றைகளை விரவி,  அதன்மேல் சிங்க முதலியவற்றை வேட்டையாடுவது போலும், காட்டில் மலரும் பல்வேறு மலர்கள் போலும் ஓவியம் வரையப்பட்ட  போர்வையை விரித்திருந்தனர். இப்படுக்கை சிறப்புற, காதலோடு துணையைப் புணர்ந்த அன்னங்களின் வெண்மையான சிறகுகளை இட்டுக் கஞ்சி இட்டு வெளுக்கப்பட்ட துணியை, துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் வெண்மையான நிறத்தையுடைய மயிரால் இணைத்த மெத்தைக்கு மேலாகப் பரப்பி, (அத்தூவிகளுக்கு மேலாக) தலையணைகளும் இட்டு, மலரிதழ்கள் வைத்து(மணமூட்டப்பட்ட)தூய மடியினை விரித்த படுக்கையின்கண்,   

 

ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப்
ஆரம் = மாலை; அலர்தல் = மலர்தல், விரிதல்; அலர் முலை = பெருத்த முலை; ஆகம் = மார்பு

ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்து = முன்பு முத்துமாலைகள் அணிந்த  பருத்த முலையினையுடைய மார்பினில்,

பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
பின் அமை = பின்புறம் அமைந்த; நெடு வீழ் தாழ = நீண்ட கூந்தல் தாழ்ந்து கிடக்க; துணை துறந்து = தன் துணையாகிய கணவனைப் பிரிந்து

 பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து = தன் கணவனைப் பிரிந்திருப்பதால், பின்புறம் அமைந்த நீண்ட கூந்தல்  தாழ்ந்து வீழ்ந்து கிடக்க,

நன்னுதல் உலறிய சின்மெல் லோதி
உலறிய = வறண்ட; ஓதி = பெண்களின் கூந்தல்

நன்னுதல் உலறிய சின்மெல் லோதி = தன்னுடைய நல்ல நெற்றியில், (எண்ணெய் தடவாததால்) வறண்ட சிலவாகிய மென்மையான மயிர்,

நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்
வார் = நுண்மை; குழை = காதணி; நெடுநீர் வார்குழை = நீண்ட (தன்மையையுடைய) நுண்மையான காதணி

நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண் = மிகுதியாக ஒளிரும் காதணிகளை நீக்கி, சிறிய துளைகளில்,

வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் . . .140
வாயுறை = ஓலைச் சுருள்;
வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் = ஓலைச் சுருள்  அழுத்திய வெறுமையாகத் தொங்கும் காதினையும்,

பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
பொலம் = பொன்; வார் = ஒழுங்கு, நுண்மை

பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை = பொன்னாலான வளையல்கள் அணிந்திருந்த நுண்மையான மயிர் உள்ள முன்கைகளில்,  

வலம்புரி வளையடு கடிகைநூல் யாத்து
கடிகை = காப்பு; யாத்த = கட்டிய

வலம்புரி வளையடு கடிகைநூல் யாத்து = வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக் கயிற்றைக் கட்டி

வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
பகுவாய் = பிளந்த வாய்; வணக்கு = வளைத்து

வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்து  = வாளைமீனின் பிளந்த வாயைப் போன்ற வளைந்த

செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
விளக்கம் = மோதிரம்; கேழ் = நிறம்

செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப் = சிவந்த நிறமுடைய மோதிரத்தை  சிவந்த கைவிரலில் அணிந்து,

பூந்துகில் மரீஇய ஏந்துகோட் டல்குல் . . . 145
மரீஇய = தழுவிய (உடுத்திய)

பூந்துகில் மரீஇய ஏந்துகோட் டல்குல்  =  பூவேலைப்பாடுகள் அமைந்த ஆடையை (பட்டாடையை) அணிந்திருந்த உயர்ந்த வளைவினையுடைய அல்குலில்

அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு
அவிர் = ஒளி; கலிங்கம் = ஆடை

அம் மாசு ஊர்ந்த அவிர்நூல் கலிங்கமொடு = அழகிய  பருத்தி நூலால் அமைந்த மாசு படிந்த ஆடையோடு,

புனையா ஓவியங் கடுப்பப்

கடுப்ப = போன்ற;

புனையா ஓவியங் கடுப்ப = வண்ணங்களால் அலங்கரிக்கப் படாத ஓவியம் போல் தலைவி இருந்தாள்

 புனைவில் தளிரேர் மேனித் தாய சுணங்கின்

புனைவு = ஒப்பனை; தளிர் ஏர் = தளிர் போன்ற; தாய = பரவிய; சுணங்கு = தேமல்

புனைவில் தளிரேர் மேனித் தாய சுணங்கின் = ஒப்பனை செய்யப்படாத தேமல் பரந்த மாந்தளிர் போன்ற மேனியில்,

அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை
பணை = மூங்கில்; தடைஇய = திரண்ட; முகிழ் = மொட்டு

ம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை = அழகிய, திரண்ட மூங்கில் போன்ற மென்மையான தோள்களோடும், தாமரை மொட்டுப் போன்ற முலைகளோடும்,

வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் . . .150
வம்பு = முலைக் கச்சு; விசித்து = இறுகக் கட்டி; யாத்த = பிணைத்த; சாய்தல் = மெலிதல்; நுசுப்பு = இடை
வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் =  முலைக் கச்சுகளை இறுகக் கட்டிய , வளைந்து மெலிந்த இடுப்பையுடைய,

மெல்லியல் மகளிர் நல்லடி வருட

  மெல்லியல் மகளிர் நல்லடி வருட = மென்மையான சாயலையுடைய பணிப்பெண்கள் தலைவியின் நல்ல அடிகளைத் தடவி ஆறுதல் கூறினார்கள்.

கருத்துரை: போருக்குச் சென்ற தன் கணவனைப் பிரிந்திருந்த தலைவி, முன்பு முத்துமாலைகள் அணிந்த பருத்த முலைகளையுடைய தன் மார்பில், பின்புறம் அமைந்த நீண்ட கூந்தல்  தாழ்ந்து வீழ்ந்து கிடக்க, தன்னுடைய நல்ல நெற்றியில், எண்ணெய் தடவாததால் வறண்ட சிலவாகிய மென்மையான மயிர் புரள, கட்டிலில் படுத்திருந்தாள். அவள் தன் காதணிகளை நீக்கி, தன் காதுகளில் உள்ள சிறிய துளைகளில், ஓலைச் சுருளை அணிந்திருந்தாள். அவள், முன்பு   பொன்னாலான வளையல்கள் அணிந்திருந்த தன்னுடைய முன்கைகளில், இப்பொழுது வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக் கயிற்றையும் கட்டி இருந்தாள்.  வாளைமீனின் பிளந்த வாயைப் போன்ற வளைந்த சிவந்த நிறமுடைய மோதிரத்தை தன்னுடைய சிவந்த கைவிரலில் அணிந்திருந்தாள்.  முன்பு பூவேலைப்பாடுகள் அமைந்த ஆடையை உடுத்தியிருந்த உயர்ந்த வளைவுகள் உள்ள அல்குலில், நூலால் செய்த மாசு படிந்த புடைவையை உடுத்திக்கொண்டு, வண்ணங்களால் அலங்கரிக்கப் படாத ஓவியம் போல் தலைவி காட்சி அளித்தாள். ஒப்பனை செய்யப்படாத கால்களோடு, தேமல் பரந்த, மாந்தளிர் போன்ற மேனியில், அழகிய, திரண்ட மூங்கில் போன்ற மென்மையான தோள்களோடும், தாமரை மொட்டுப் போன்ற முலைகளோடும், முலைக் கச்சுகளை இறுகக் கட்டிய , வளைந்து மெலிந்த இடுப்பையுடைய, மென்மையான சாயலையுடைய பணிப்பெண்கள் தலைவியின் நல்ல அடிகளைத் தடவி ஆறுதல் கூறினர்.

 

நரை விராவுற்ற நறுமென் கூந்தல்
விராவுற்ற = கலந்திருக்கும்; நறு = மணமுள்ள;

நரை விராவுற்ற நறுமென் கூந்தல் = நரைத்த முடி  கலந்திருக்கும் மணமுள்ள மெல்லிய மயிரினையுடைய,

செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
செம்முகம் = சிவந்த முகம்; செவிலியர் = செவிலித் தாயர்; கைம்மிக = அளவுக்கு மீறி, குழீஇ = கூடி;

செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் = சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயர் அளவுக்குமீறி அதிகமாகத் திரண்டு,

குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி
குறியவும் நெடியவும் = சுருக்காகவும் விளக்கமாகவும்; பயிற்றி = பலமுறை கூறுதல் குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி = சுருக்கமாகவும் விளக்கமாகவும்  ஆறுதலாகப் பலவற்றையும் திரும்பத்திரும்பக் கூறி,

இன்னே வருகுவர் இன் துணை யோர் எ
இன்னே = இப்பொழுதே

இன்னே வருகுவர் இன் துணை யோர் எ = ”இப்பொழுதே வந்துவிடுவார் ன் இனிய துணைவர்என்று,

உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக் கலுழ்ந்து
உகந்தவை = ஏற்றவை; விரும்பத் தகுந்தவை; ஒல்லாள் = உடன்படாதவள்; கலுழ்தல் = அழுதல், கலங்குதல்

உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக் கலுழ்ந்து =  அவள் மனத்துக்கு ஏற்ற சொற்களைக் கூறியும் அதனை ஏற்காதவளாய், மிகவும் கலங்கி,

 நுண் சேறு வழித்த நோன்நிலைத் திரள் கால்
நுண் சேறு  - இங்கு சாதிலிங்கத்தைக் குறிக்கிறது; வழித்த = பூசிய; நோன்நிலை = வலிமை வாய்ந்த; திரள் கால் = பருத்த கால்

நுண் சேறு வழித்த நோன்நிலைத் திரள் கால் = நுண்ணிய சாதிலிஙத்தைப் பூசிய,  உறுதியாக நிற்கும் திரண்ட கால்களை

ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்திப்
ஊறா வறுமுலை = பால சுரக்காத முலை; கொளீஇய = கொண்ட

ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி = பால சுரக்காத வறிய முலை போன்ற குடங்களைக் கொண்ட  கால்களைக் கட்டிலோடு நன்கு பொருத்தி

புதுவது இயன்ற மெழுகு செய் படமிசைத்
மெழுகுசெய் படமிசை = கட்டிலுக்கு அமைந்துள்ள, மெழுகு பூசிய திரைச் சீலையின் மேல்

புதுவது இயன்ற மெழுகு செய் படமிசை = புதிதாகச் செய்த, மெழுகு பூசிய திரைச்சீலையின் மேல்,

திண் நிலை மருப்பின் ஆடு தலையாக . . .160
மருப்பு = கொம்பு; ஆடு – மேட ராசியைக் குறிக்கிறது; தலை ஆக = முதலாக
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக = வலிமை வாய்ந்த கொம்புகளையுடைய மேடராசியை முதலாகக்கொண்டு,

விண் ர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
விண் ஊர்பு = வானில் ஊர்ந்து; திரிதரும் = திரிகின்ற; வீங்கு செலல் = விரைவாகச் செல்லும்; மண்டிலம் = ஞாயிறு

விண் ர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து = வானத்தில் ஊர்ந்து திரிந்து விரைந்து செல்லும் ஞாயிற்றோடு,

முரண்மிகு சிறப்பின்செல்வனொடு நிலைஇய
முரண் = மாறுபாடு; செல்வன் – இங்கு திங்களைக் குறிக்கிறது; நிலைஇய = நிலைபெற்ற

முரண்மிகு சிறப்பின்செல்வனொடு நிலைஇய = மாறுபட்டு, மிகுந்த சிறப்புடைய திங்களோடு நிலைபெற்ற,

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது யிரா
உரோகிணி = உரோகிணி என்னும் விண்மீன்; நினைவனள் = நினைத்தவள்; நெடிது = நீண்ட; உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல்

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது யிரா = உரோகிணி என்னும்  விண்மீனை நினைத்து, அதைப் பார்த்து நீண்ட பெருமூச்சுவிட்டு,

மா தழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப்பனி
மா = கரிய; மலிதல் = மிகுதல்; அரி = கண்; பனி = நீர்

மா தழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப்பனி = ருமையான கண்ணிமைகளில்  நிரம்பி வழியும் நிலையிலுள்ள முத்துப் போன்ற கண்ணீரை

செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சில தெறியாப்
தெறியா = தெறித்து

செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சில தெறியாப் = தன் சிவந்த விரலால் கடைக்கண்ணில் கொண்டு சேர்த்து,  விரலில் மீந்த சிலவற்றைச் சுண்டிவிட்டு,

புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு
புலம்பு = தனிமை (தனிமைத் துயரம்); வதியும் = தங்கி இருக்கும்; நலம் கிளர் = அன்பு மிகுந்த; அரிவை = பெண் (இங்கு தலைவியைக் குறிக்கிறது)

புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு = தனிமையில் வருந்தும் அன்பு மிகுந்த  இளம்பெண்ணுக்குத்

இன்னா அரும்படர் தீர, விறல் தந்து

விறல் = வெற்றி

இன்னா அரும்படர் தீர, விறல் தந்து = தீதாக இருக்கின்ற ஆற்றுதற்கரிய துயரம் தீரும்படி, வெற்றியைக் கொடுத்து

இன்னே முடிக தில் அம்ம

இன்னே = இப்பொழுதே; தில் – விரைவுக் குறிப்பு

 இன்னே முடிக தில் அம்ம = இப்பொழுதே முடிவதாக

கருத்துரை: நரைத்த முடி கலந்திருக்கும் மணமுள்ள மெல்லிய மயிரினையுடைய, சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயர் அளவுக்குமீறி அதிகமாகத் திரண்டு, சுருக்கமாகவும் விளக்கமாகவும் ஆறுதலாகப் பலவற்றையும் திரும்பத்திரும்பக் கூறினர்.  ”இப்பொழுதே வந்துவிடுவார் ன் இனிய துணைவர்என்று, அவள் மனத்துக்கு ஏற்ற சொற்களைக் கூறியும், தலைவி  அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் மனம் கலங்கினாள்.   நுண்ணிய சாதிலிங்கத்தைப் பூசிய,  வலிமையான கால்கள், பால் சுரக்காத வறிய முலை போன்ற குடங்களைக் கொண்டு விளங்கின. அத்தகைய கால்களைக் கட்டிலின் மேற்பகுதியோடு நன்கு இணைத்திருந்தனர். புதிதாகச் செய்த, மெழுகு பூசியகட்டிலின் மேல் விதானத்தில்,  திரைச்சீலையைக் கட்டியிருந்தனர். அதில் வலிமை வாய்ந்த கொம்புகளையுடைய மேடராசியை முதலாகக்கொண்டு, வானத்தில் ஊர்ந்து திரிந்து விரைந்து செல்லும் ஞாயிற்றோடு, மாறுபட்டு, மிகுந்த சிறப்புடைய திங்களோடு எப்பொழுதும் நிலைபெற்று விளங்கும், உரோகிணி என்னும் விண்மீனின் சித்திரம் வரையப்பட்டிருந்தது.  அதைப் பார்த்த தலைவி,  தான் தன் கணவனுடன் அவ்வாறு பிரியாமல் வாழும் பேறு பெறவில்லையே என்று நினைத்த்ப்  பெருமூச்சுவிட்டாள். அவளுடைய ருமையான கண்ணிமைகளில் நிரம்பி வழியும் முத்துப் போன்ற கண்ணீரை,  தன் சிவந்த விரலால் கடைக்கண்ணில் கொண்டு சேர்த்துவிரலில் மீந்த சிலவற்றைச் சுண்டிவிட்டு, தனிமையில் வருந்தினாள்.  அன்பு மிகுந்த  தலைவிக்குத் துன்பம் தருகின்ற ஆற்றமுடியாத துயரம் தீரும்படி, வெற்றியைக் கொடுத்து, இப்பொழுதே இந்தப் போர் முடியவேண்டும் என்று செவிலித் தாயர் கொற்றவையை வேண்டினர்.


. . .   . .. .    . . . . .  . . .      . . . .  மின் அவிர்

மின் அவிர் = ஒளி மின்னும்

ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
ஓடை = நெற்றிப் பட்டம்; பொலிவு = விளங்கிய; நவிலல் = பழகுதல்; வினை நவில் யானை = போர்த் தொழிலில் பழகிய யானை

ஓடையடு பொலிந்த வினை நவில் யானை = நெற்றிப்பட்டத்தோடு விளங்கி,  போர்த்தொழிலில் பயிற்சி பெற்ற  யானையின்

நீள் திரள் தடக்கை நிலமிசைப் புரளக் . . .170
தடக்கை = பெரிய கை (இங்கு யானையின் துதிக்கையைக் குறிக்கிறது)
நீள் திரள் தடக்கை நிலமிசைப் புரளக் = நீண்டு திரண்ட துதிக்கை வெட்டப்பட்டு நிலத்தின்மேல் புரளும்படி

களிறு களம் படுத்த பெருஞ்செய் டவர்
களிறு களம் படுத்த பெருஞ்செய் டவர் = யானைகளைக் கொன்ற பெரும் செயலையுடைய வீரரின்,

ஒளிறு  வாள் விழுப்புண் காணிய புறம் போந்து
காணிய = காண்பதற்கு; புறம் போந்து = வெளியே சென்று

ஒளிறு  வாள் விழுப்புண் காணிய புறம் போந்து = சுடர்விடும் வாளினால் ஏற்பட்ட விழுப்புண்ணைக் காண்பதற்காக பாசறையைவிட்டு வெளியில் வந்து,

வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்
வடந்தை = வாடை; வளி = காற்று; நுடங்கி = அசைந்து

வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித் = வாடையின் குளிர்ந்த காற்று அடிக்குந்தோறும் நெளிந்து அசைந்து,

தெற்கு ஏர்பு றைஞ்சிய தலைய நன் பல
ஏர்பு = எழுந்து; இறைஞ்சிய = சாய்ந்த; தலைஇய = தலையை உடையதாய்

தெற்கு ஏர்பு றைஞ்சிய தலைய நன் பல = தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்த தீச்சுடரையுடையவாய், பலவான,

பாண்டில் விளக்கில் பரூஉச் சுடர் அழல . . .  175
பாண்டில் = அகல் விளக்கு; பரூஉச் சுடர் = பருத்த சுடர்; அழல = எரி;

பாண்டில் விளக்கில் பரூஉச் சுடர் அழல = அகல் விளக்கில் பருத்த திரி சுடர்விட்டு எரிய,

வேம்புதலை யாத்த நோன்காழ் எகமொடு
யாத்த = கட்டிய; நோன் = வலிய; காழ் = காம்பு; எஃகு = வேல்

வேம்புதலை யாத்த நோன்காழ் எகமொடு = வேப்பம் பூ மாலையைத் நுனியில் சூட்டிய வலிய காம்பினையுடைய வேலோடு,

முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
முன்னோன் = அரசனுக்கு முன்னே சென்றவன்;

முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் = முன்செல்கின்றவன் புண்பட்ட வீரரை ஒவ்வொருவராகக் காட்ட, பின்னாக,

மணி புறத்து இட்ட மாத்தாட் பிடியொடு
மா = பெரிய; தால் = கால்; பிடி = பெண்யானை

மணி புறத்து இட்ட மாத்தாட் பிடியொடு = மணிகளை முதுகில் இட்ட பெரிய கால்களையுடைய பெண்யானைகளோடு

பருமம் களையாப் பாய்பரிக் கலிமா
பருமம் = சேணம்; பரி = விரைவு; கலி = செருக்கு; மா = குதிரை

பருமம் களையாப் பாய்பரிக் கலிமா  = சேணம் களையப்பெறாத பாயும் ஓட்டத்தையுடைய செருக்கின குதிரைகள்,

இருஞ் சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப் . .180
இரு = கரிய; எறி துளி = வீசும் துளிகளை, விதிர்ப்ப = உதற
இருஞ் சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப் = கரிய சேற்றையுடைய தெருவில், தம்மேலேவீசும் துளிகளை உதற
,

புடைவீழ் அம்துகில் இடவயின் தழீஇ
புடை = பக்கம்;வீழ் = வீழ்ந்த; அம் = அழகிய; துகில் = ஆடை; இட வயின் = இடதுபக்கம்; தழீஇ = தழுவி

புடைவீழ் அம்துகில் இடவயின் தழீஇ = பக்கவாட்டில் நழுவி வீழ்ந்த அழகிய மேல் துண்டை இடப்பக்கத்தே தழுவிக்கொண்டு,

வாள் தோள் கோத்த வன்கண் காளை
வாள் தோள் கோத்த = வளைத் தோளில் கோத்த; வன்கண் = வலிமை; காளை = காலை போன்ற வீரன்

வாள் தோள் கோத்த வன்கண் காளை = வாளைத் தோளில் கோத்த வலிமையான  காளைபோன்ற வீரனின்,

சுவல்மிசை மைத்த கையன் முகன் அமர்ந்து
சுவல் = தோள்; மிசை = மேலே; அமைத்த கையன் = கையை வைத்து; முகன் அமர்ந்து = முகம் பொருந்தி;

சுவல்மிசை மைத்த கையன் முகன் அமர்ந்து = தோள்மேல் தனது கையை வைத்து, முகத்தில் மலர்ச்சியோடு,


நூல் கால் யாத்த மாலை வெண்குடை
நூல் கால் யாத்த = நூலால் கோக்கப்பட்ட; மாலை = முத்து மாலை

நூல் கால் யாத்த மாலை வெண்குடை = நூலால் சட்டத்தே கட்டின முத்துமாலையை உடைய கொற்றக்குடை,

தவ்வென்று அசைஇத் தா துளி மறைப்ப . . .  185
தவ்வென்று = ”தவ்” என்ற ஓசையோடு; அசைஈ – அசைந்து; தா = தாவும்;

தவ்வென்று அசைஇத் தா துளி மறைப்ப = தவ்வென்னும் ஓசையோடு அசைந்து, பரக்கின்ற துளியை மறைக்க,

நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்

நள்ளென் யாமம் = நள் என்னும் ஓசையையுடைய  நள்ளிரவு; பள்ளி கொள்ளான் = படுக்கையில் படுக்காமல் (உறங்காமல்)

நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் = நள்ளென்னும் ஓசையையுடைய நடுயாமத்திலும் உறங்காதவனாய்,

சிலரொடு திரிதரும் வேந்தன்
திரிதரும் = திரிகின்ற

சிலரொடு திரிதரும் வேந்தன்  = ஒருசில வீரரோடு திரியும் அரசன்,

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே. . . .188
முரணிய = வேறுபட்டு; பாசறைத் தொழில் = போர்த் தொழில்

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே =  பலரோடு மாறுபட்டுப் பொருகின்ற பாசறையிடத்துப் போர்த்தொழில் (இப்பொழுதே முடிவதாக).

கருத்துரை: ஓளி மின்னும் நெற்றிப்பட்டத்தோடு விளங்கி, போர்த்தொழிலில் பயிற்சி பெற்ற  யானையின் நீண்டு திரண்ட துதிக்கை வெட்டப்பட்டு நிலத்தின்மேல் புரளும்படி,  வீரர்கள் யானைகளைக் கொன்றனர். அவ்வீரர்கள் போரிலே வாளால் பட்ட விழுப்புண்களைக் காண்பதற்காக, அரசன் பாசறையிலிருந்து வெளியே சென்றான். அப்பொழுது, அங்கே, அகல் விளக்குகளில் எரிந்துகொண்டிருந்த பருத்த திரிகள், வடக்குத் திசையிலிருந்து காற்று வந்தால் தெற்கு நோக்கிச் சாய்ந்தன.  வேப்பம் பூ மாலையை நுனியில் சூட்டிய வலிய காம்பினையுடைய வேலோடு, வீரன் ஒருவன் அரசனுக்கு முன்னே சென்று, புண்பட்ட வீர்களை அரசனுக்கு முறையாகக் காட்டினான். பின்னர், பாசறையின் கரிய சேறுடைய தெருவில், மணிகளை முதுகில் இட்ட பெரிய கால்களையுடைய பெண்யானைகளோடுசேணம் களையப்பெறாத பாயும் ஓட்டத்தையுடைய செருக்கின குதிரைகள், தம்மேலே வீசும் துளிகளை உதறிச் சென்றன. அரசன் தன் இடப்பக்கத்து நழுவி வீழ்ந்த அழகிய மேலாடையை தழுவிக்கொண்டான். வாளைத் தோளில் கோத்த வலிமையுடைய  காளைபோன்ற வீரனின் தோள்மேல்  தன் வலதுகையை வைத்துக்கொண்டு, அரசன் போரில் விழுப்புண் பட்ட வீரர்களின் முகம் மலர்ச்சியுறுமாறு அவர்களை நோக்கினான். இவ்வாறு வீரர்களைப் பார்த்துவரும் மன்னன்மேல் மழைத்துளி படாதவாறு, நூலால் கோக்கப்பட்ட முத்துமாலைகள் தொங்கும் வெண்கொற்றக் குடை தவ்வென்னும் ஓசையோடு அசைந்து தாவும்  மழைத்துளிகளை மறைத்தது.  நள்ளென்னும் ஓசையையுடைய நள்ளிரவிலும்  உறங்காமல், சில வீரர்களோடு புண்பட்ட வீரர்களைப் பார்த்துவரும் அரசன், பல பகை மன்னர்களோடு மாறுபட்டு, பாசறையில் தங்கி நடத்தும் இந்தப் போர் இப்பொழுதே முடிவதாக.

 

நெடுநல்வாடை – அறிமுகம்

                                                                   நெடுநல்வாடை – அறிமுகம் முனைவர் இர. பிரபாகரன்   தமிழ் மொழியின் தொன்ம...